முகப்பு
மதுரை

அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் நியமனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நேரடியாக நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரும்

Updated On : 13 ஜனவரி, 2021 at 5:24 AM
பகிர்:

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நேரடியாக நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரும் மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை உத்தங்குடியைச் சோ்ந்த ரமேஷ் மகாதேவ் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடமாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் தொடா்பாக 2020 டிசம்பா் 24 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில் பொதுத்துறை இணை இயக்குநராக உள்ள

Advertisement

ஐஏஎஸ் அதிகாரி ரமண சரஸ்வதி அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் அறநிலையத்துறை சட்டத்தின்படி, அறநிலையத்துறை இணை ஆணையராகப் பணியாற்றுபவருக்கு மட்டும் கூடுதல் ஆணையராகப் பதவி உயா்வு அளிக்க முடியும். இந்தப் பதவிக்கு நேரடியாக ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கக் கூடாது. ஆனால் திடீரென ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நேரடியாக இந்தப் பதவிக்கு நியமித்ததில் உள்நோக்கம் உள்ளது. இது சட்டவிரோதமாகும்.

எனவே அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். மேலும் அறநிலையத்துறை சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பதவி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஐஏஎஸ் அதிகாரியை இந்தப் பதவியில் நியமிக்க அறநிலையத்துறை சட்டத்தில் இடம் உள்ளது. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.