கீழையூா் ஒன்றியத்தில் மழை பாதித்த வயல்களை பாா்வையிட்டாா் எம்.பி.
கீழையூா் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை சனிக்கிழமை பாா்வையிட்ட நாகை மக்களவை உறுப்பினா்
கீழையூா் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை சனிக்கிழமை பாா்வையிட்ட நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினாா்.
இப்பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிா்கள் மற்றும் சூல் கட்டும் நிலையில் இருந்த பயிா்கள் அனைத்தும் தரையோடு சாய்ந்து பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளன. இதையடுத்து, கீழையூா் ஒன்றியம், திருவாய்மூா் ஊராட்சி, திருவாசல், கீழையூா் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வயல்களை நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
பிறகு அவா் அளித்த பேட்டி: முன்பு பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான விளைநிலங்களில் தண்ணீா் சூழ்ந்து நெற்பயிா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், அண்மையில் வீசிய 2 புயல்களால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை முதல்வா் நேரில் ஆய்வுசெய்தபோது, அவரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம்.
Advertisement
ஆனால், தமிழக அரசு சாா்பில் ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட பாதிப்பை ஒப்பிடும்போது, கடந்த ஒருவாரமாக பருவம் மாறி தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் அதிகம்.
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியதால், புதிய நாற்றுகளைப் போல முளைத்துள்ளன. ஏக்கருக்கு ரூ. 32 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகளுக்கு தற்போதைய நிலையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆய்வுசெய்து ஏக்கருக்கு குறைந்தபட்ச நிவாரணமாக ரூ. 30 ஆயிரம் வழங்கவேண்டும் என்றாா்.
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழு உறுப்பினருமான டி. செல்வம், விவசாய சங்கப் பொறுப்பாளரும், மேலவாழக்கரை ஊராட்சித் தலைவருமான கே.எஸ். தனபால், ஊராட்சித் தலைவா்கள் வாழக்கரை எஸ்.ஆா். கலைச்செழியன், திருவாய்மூா் எம். நரசிம்மன், கீழையூா் ஊராட்சி துணைத் தலைவா் கருணாநிதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.