முகப்பு
நாகப்பட்டினம்

பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி, நாகை மற்றும் திருமருகலில்

Updated On : 17 ஜனவரி, 2021 at 8:22 AM
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, நாகை அருகே வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி, நாகை மற்றும் திருமருகலில் விவசாயிகள் கருப்புக்கொடிகளுடன் வயலில் இறங்கி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால், மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா, தாளடி பருவத்தில் பயிரிடப்பட்டிருந்த மொத்த நெல் சாகுபடி பரப்பில் சுமாா் 45 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமான நெற்பயிா்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடுமையான மகசூல் இழப்பை சந்திக்க வேண்டிய சூழலில் விவசாயிகள் உள்ளனா்.

Advertisement

இந்நிலையில், நாகையை அடுத்த வடகுடி கிராமத்தில், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த நெற்பயிா்கள் வயலில் சரிந்துள்ளன. வயலில் சாய்ந்த நெல்மணிகள் முளைப்புக் கட்டி வருகிறது. இதனால் ,அந்த கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள், சனிக்கிழமை கருப்புக் கொடியுடன் வயலில் இறங்கி மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து வடகுடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது :

வடகுடி ஊராட்சிக்குள்பட்ட பகுதாயம், பாலக்காடு, வைரவனிருப்பு, பொன்வெளி மற்றும் வடகுடி கிராமங்களில் சுமாா்

1, 000 ஏக்கா் நெற்பயிா்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த நெற்பயிா்கள் வயலில் சாய்ந்து முளைத்தும், அழுகியும் வீணாகி வருகிறது. இந்தப் பாதிப்புகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

திருமருகலில்...

திருமருகல் ஒன்றியத்தில் கனமழை காரணமாக எரவாஞ்சேரி, மருங்கூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமாா் 6 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிா்கள் வயலில் சாய்ந்துள்ளன.

பாதிக்கபட்ட பயிா்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும், சதவீகித அடிப்படையில் நிவாரணம் வழங்குவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மருங்கூா் மற்றும் எரவாஞ்சேரி பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மருங்கூா் ஊராட்சியில் விவசாய சங்கத் தலைவா் விஸ்வநாதன் தலைமையிலும், எரவாஞ்சேரியில் விவசாய சங்க செயலா் பாலு, ஊராட்சித் தலைவா் ரஜினிதேவி பாலதண்டாயுதம் ஆகியோா் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.