பள்ளி மாணவர்களுக்கு இலவச கலைப் பயிற்சி: ஆட்சியர் ஜகந்நாதன் தகவல்
ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், நாமக்கல்லில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி மாணவர்களுக்கு
ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், நாமக்கல்லில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜகந்நாதன்.
தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை மற்றும் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.
நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மே 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் 217 மாணவ, மாணவிகள் பங்கேற்று பரத நாட்டியம், வாய்ப்பாட்டு, கராத்தே, யோகா, கிராமிய நடனம், சிலம்பம், ஓவியம், மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரிப்புக் கலை ஆகியவை குறித்து பயிற்சியை பெற்றனர்.
Advertisement
முகாமின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் டி.ஜகந்நாதன் பங்கேற்று 16 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியது: தமிழக கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் நாமக்கல் ஜவஹர் சிறுவர் மன்றம் குழந்தைகளிடையே மறைந்து கிடக்கும் ஆக்கப்பூர்வமான திறமைகளை கண்டுணர்ந்து, நுண்கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் பயிற்சி முகாமை நடத்தியுள்ளது.
இதன் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 10 மாணவ, மாணவிகள் மே 15 முதல் 25ஆம் தேதி வரை ஏற்காட்டில் நடைபெற உள்ள கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவர். தொடர்ந்து, இந்தப் பயிற்சி வகுப்புகள் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவசமாக நடத்தப்படும். மாணவ, மாணவிகள் இந்தப் பயிற்சியை மேற்கொண்டு சிறந்த கலைஞர்களாக உருவாகிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
விழாவில் ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மா.தில்லை சிவக்குமார் வரவேற்றார்.
பரதநாட்டிய ஆசிரியர் கங்காஸ்ரீதரன், நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் என்.கே.துரைசாமி, ஜேசிஎஸ் கிளப் மண்டலத் தலைவர் திருஞானசம்பந்தம், அரிமா சங்கப் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.