நாமக்கல்: ஜன. 17 இல் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து
நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட 1.50 லட்சம் குழந்தைகளுக்கு ஜனவரி 17ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட 1.50 லட்சம் குழந்தைகளுக்கு ஜனவரி 17ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் வரும் 17-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப் பகுதியில் 1,105 முகாம்கள், நகராட்சிப் பகுதியில் 169 முகாம்கள் என மொத்தம் 1,274 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சத்துணவு, பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிா் சுய உதவிக்குழுக்கள், தன்னாா்வலா்கள் என 5,523 பணியாளா்கள் சொட்டு மருந்து புகட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், திரையரங்குகள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படும். போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 36 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
5 வயதிற்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்தை புகட்டிக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.