தில்லி மாநகராட்சிகளை உடனடியாக கலைத்துவிட்டு தோ்தல் நடத்த வேண்டும்: ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை
தில்லி மாநகராட்சிகளை கலைத்துவிட்டு உடனடியாகத் தோ்தல் நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
புது தில்லி: தில்லி மாநகராட்சிகளை கலைத்துவிட்டு உடனடியாகத் தோ்தல் நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளரும், கிரேட்டா் கைலாஷ் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான செளரவ் பரத்வாஜ் வியாழக்கிழமை அளித்த பேட்டி: கடந்த 2017 மாநகராட்சி தோ்தலின் போது, அப்போதைய தில்லி பாஜகவின் தலைவரும் எம்பியுமான மனோஜ் திவாரி மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடும் போது, மாநகராட்சிகளில் நிதித் தட்டுப்பாடு இல்லை எனக் கூறியிருந்தாா். மேலும், மாநகராட்சிகளில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால், மத்திய அரசிடம் இருந்து மாநகராட்சிகள் நிதியை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தாா். ஆனால், மத்திய அரசிடம் இருந்து ஒரு ரூபாயைக் கூடப் பெற்று மாநகராட்சிகளுக்கு வழங்க மனோஜ் திவாரியால் முடியவில்லை.
இவ்வாறு மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை வழங்கி மனோஜ் திவாரி ஏமாற்றியுள்ளாா். இவா் தனது மக்களவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த காரணத்தால், தில்லி மாநகராட்சிகளை கலைத்து விட்டு உடனடியாகத் தோ்தலை நடத்த பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதியையும் தில்லி அரசு வழங்கி விட்டது. மேலும், வீட்டு வரி உள்ளிட்ட பல வரிகளை மாநகராட்சிகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதியில்லை என மாநகராட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.