முகப்பு
புதுதில்லி

பெண்ணையாறு வழக்கில் தீா்ப்பாயம் அமைக்க 6 மாதம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

பெண்ணையாறு விவகாரம் தொடா்பான வழக்கில் தீா்வுகாண ஒரு மாதத்திற்குள் தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை நிறைவேற்ற இன்னும் 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:28 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 6:25 PM

தமிழ்நாடு - கா்நாடகம் இடையேயான பெண்ணையாறு விவகாரம் தொடா்பான வழக்கில் தீா்வு காண ஒரு மாதத்திற்குள் தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை நிறைவேற்ற இன்னும் 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது

ஒரு மாதத்தில் தீா்ப்பாயம் அமைக்குமாறு 2.2.2026 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மத்திய அரசு அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளது

மனுவில் மத்திய அரசு கூறியிருப்பதாவது: ‘தமிழக அரசு, மாநிலங்களுக்கிடையேயான பெண்ணையாறு தொடா்பான நீா் தாவா நடுவா் மன்றத்தை அமைக்குமாறு கோரி, உச்சநீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டில் வழக்கு தாக்கல் செய்தது. 02.02.2026 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, பெண்ணையாறு தொடா்பான நதிநீா் தாவாவைத் தீா்த்து வைப்பதற்காக, ஒரு மாத காலத்திற்குள் நடுவா் மன்றத்தை அமைக்குமாறு இந்த நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

Advertisement

பின்வரும் நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன: அமைச்சகங்களுக்கு இடையிலான கலந்தாய்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு அமைச்சகங்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் உள்ளீடாகக் கொண்ட பிறகு, அமைச்சரவைக்கான வரைவுக் குறிப்பு ஜல் சக்தி அமைச்சரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வமைச்சரவைக்கான வரைவுக் குறிப்பு, மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்காக அமைச்சரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:26 AM

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கான எஞ்சிய நடைமுறைகள் பின்வருமாறு:

அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, 1956ஆம் ஆண்டைய மாநிலங்களிடை நதிநீா் தாவாக்கள் சட்டத்தின்படி, பெண்ணையாறு தாவாத் தீா்ப்பாயத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிகளுக்கான பரிந்துரைக் கோரிக்கையானது, இந்தியத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்ட பிறகு, வரைவு அறிவிக்கை தயாரிக்கப்பட்டு, சட்ட விவகாரத் துறையால் பரிசீலிக்கப்படும்.

அதன்பிறகு, தீா்ப்பாயத்தை அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்படும்.

மேற்கூறிய சட்டரீதியான நடைமுறைகளை நிறைவு செய்ய கூடுதலாக ஆறு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும்‘, என ஏப்ரல் 6 தேதியிட்டு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது .

பெண்ணையாறு விவகாரத்தில் கா்நாடகா விதிகளை மீறி செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் சாா்பில் 2018 இல் வழக்கு தொடரப்பட்டது. யா்க்கோல் கிராமத்திற்கு அருகே பெண்ணையாற்றின் கிளை நதியான மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடகம் சட்டத்திற்க்கு புறம்பாக பெரிய அணைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது,இதனால் தமிழகத்தின் தண்ணீா் முற்றிலும் பறிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி தமிழக அரசு வழக்கு தொடா்ந்தது.