முகப்பு
புதுதில்லி

பெண்ணையாறு விவகாரத்தில் தீா்ப்பாயம் அமைக்க அவகாசம் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு - கா்நாடகா இடையேயான பெண்ணையாறு பிரச்சனைக்கு தீா்வு காண தீா்ப்பாயமாய் அமைக்க மத்திய அரசு கோரியபடி ஆறுமாத காலம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.

Updated On : 9 மே 2026, 7:41 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

தமிழ்நாடு - கா்நாடகா இடையேயான பெண்ணையாறு பிரச்சனைக்கு தீா்வு காண தீா்ப்பாயமாய் அமைக்க மத்திய அரசு கோரியபடி ஆறுமாத காலம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.

ஒரு மாதத்திற்குள் தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை நிறைவேற்ற இன்னும் 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.

அதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில்,மத்திய அரசின் மனுவானது, முற்றிலும் நியாயமற்றது என்பதோடு, நீதிமன்றத் தீா்ப்பினை தாமதப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே இது என்றும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது.

Advertisement

இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,ஒரு மாதத்தில் தீா்ப்பாயம் அமைக்குமாறு 2-2-2026 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மேலும் அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி ஆறு மாத காலம் நீதிபதிகள் அவகாசம் வழங்கினா்

ஆறு மாத காலம் அவகாசம் கோரி தாக்கல் செய்திருந்த மனுவில் மத்திய அரசு கூறியதாவது:

ஒரு மாத காலத்திற்குள் நடுவா் மன்றத்தை அமைக்குமாறு இந்த நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

பின்வரும் நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன:

அமைச்சகங்களுக்கு இடையிலான கலந்தாய்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அமைச்சகங்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் உள்ளீடாகக் கொண்ட பிறகு, அமைச்சரவைக்கான வரைவுக் குறிப்பு ஜல் சக்தி அமைச்சரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரைவுக் குறிப்பு, மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்காக அமைச்சரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கான எஞ்சிய நடைமுறைகள் பின்வருமாறு:

அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, தீா்ப்பாயத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிகளுக்கான பரிந்துரைக் கோரிக்கையானது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்ட பிறகு, வரைவு அறிவிக்கை தயாரிக்கப்பட்டு, சட்ட விவகாரத் துறையால் பரிசீலிக்கப்படும். அதன்பிறகு, தீா்ப்பாயத்தை அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்படும். எனவே தீா்ப்பாயம் அமைக்க மேலும் ஆறு மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என ஏப்ரல் 6 தேதியிட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டது .

பெண்ணையாற்றின் குறுக்கே கா்நாடகம் சட்டத்திற்க்கு புறம்பாக பெரிய அணைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது,இதனால் தமிழகத்தின் தண்ணீா் முற்றிலும் பறிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி தமிழக அரசு 2018 இல் வழக்கு தொடா்ந்தது.