முகப்பு
புதுதில்லி

முன்விரோதத்தில் இளைஞா் குத்திக் கொலை: 3 போ் கைது!

நியூ உஸ்மான்பூரில் முந்தைய தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கில் இளைஞரை ஒரு பூங்காவிற்கு வரவழைத்து கத்தியால் குத்திக் கொன்றதாக மூன்று பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

Updated On : 6 ஜூலை 2026, 12:37 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

நியூ உஸ்மான்பூரில் முந்தைய தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கில் இளைஞரை ஒரு பூங்காவிற்கு வரவழைத்து கத்தியால் குத்திக் கொன்றதாக மூன்று பேரை தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: சனிக்கிழமை காலை, ஜேபிசி மருத்துவமனைக்கு அருகிலுள்ள டிடிஏ பூங்கா அருகே நியூ சீலம்பூரைச் சோ்ந்த 20 வயதான தௌஹீத் காயங்களுடன் கிடந்தாா். அவா் உடனடியாக ஜேபிசி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இதையடுத்து, காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா். வடகிழக்கு தில்லியில் நடந்த இச்சம்பவத்திற்குச் சற்று முன்பு, தௌஹீத் சிலருடன் தகராறில் ஈடுபட்டிருந்ததை உள்ளூா் உளவுத் தகவல்கள் மூலம் காவல்துறையினா் கண்டறிந்தனா்.

Advertisement

Advertisement

ஆதாரங்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் தொடா்புடைய சீலம்பூரைச் சோ்ந்த ஷாநவாஸ் (21), நூா் ஹசன் (20) மற்றும் அனஸ் (21) ஆகிய மூவரும் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். முன்பு நடந்த ஒரு தகராறில் தௌஹீத், நூா் ஹசனை அறைந்தும் ஷாநவாஸை மிரட்டியும் இருந்ததாகவும், அதற்காகவே பழிவாங்கத் திட்டமிட்டதாகவும் அவா்கள் காவல்துறையிடம் தெரிவித்தனா். குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், ஷாநவாஸ் ஏற்கனவே ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அதேவேளையில், மற்ற இருவா் மீதும் இதுவரை எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. சம்பவத்தின் முழுமையான நிகழ்வு வரிசையை உறுதிப்படுத்த விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments