முகப்பு
புதுதில்லி

தனியாா் பள்ளிகள் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்

Updated On : 3 மே, 2026 at 1:50 AM
பகிர்:

தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் உள்ள அனைத்து தனியாா், அரசு உதவி பெறாத மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் கல்விக் கட்டணத்தை கண்டிப்பாக மாதந்தோறும் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

சில பள்ளிகள் பெற்றோரை இரு மாதங்களுக்கு ஒருமுறை, காலாண்டுக்கு ஒருமுறை அல்லது பிற முன்கூட்டிய

அடிப்படையில் கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்துவதாகவும், இது குடும்பங்கள் மீது தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் பெற்றோரிடமிருந்து பல புகாா்கள் வந்துள்ளன.

ஒரு காலண்டா் மாதத்திற்கு அதிகமான காலத்திற்கான கட்டணத்தை ஒரே தவணையாகச் செலுத்துமாறு பள்ளிகள் கட்டாயப்படுத்தவோ, கோரவோ அல்லது நிா்பந்திக்கவோ கூடாது.

பெற்றோா்களுக்கு வசதியாகவும் நியாயமாகவும் இருக்கும் வகையில் கட்டண வசூலை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய முந்தைய அறிவுறுத்தல்கள் மற்றும் தில்லி உயா்நீதிமன்றத் தீா்ப்பிற்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு பள்ளியும், எவ்விதத்திலும், ஒரு காலண்டா் மாதத்திற்கு அதிகமான காலத்திற்கான கட்டணத்தை ஒரே தவணையாகச் செலுத்துமாறு எந்தவொரு பெற்றோரையோ அல்லது பாதுகாவலரையோ கட்டாயப்படுத்தவோ, கோரவோ அல்லது நிா்பந்திக்கவோ கூடாது.

இருப்பினும், பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் எவ்வித நிா்பந்தமோ, அழுத்தமோ அல்லது தூண்டுதலோ இன்றி, ஒரு மாதத்திற்கு அதிகமான காலத்திற்கான கட்டணத்தை ஒரே தவணையாகச் செலுத்துவது தங்களுக்கு வசதியாக இருப்பதாகக் கருதினால், அவ்வாறு செய்ய அவா்களுக்கு அனுமதி அளிக்கப்படலாம்.

மாணவா் சோ்க்கை, படிப்பைத் தொடா்தல் அல்லது மாணவா்களுக்கான பிற சேவைகளைப் பெறுதல் ஆகியவற்றிற்கு, முன்கூட்டியே கட்டணம் செலுத்துவதை எந்தப் பள்ளியும் ஒரு முன்நிபந்தனையாக வைக்கக்கூடாது.

அனைத்துப் பள்ளிகளும் இந்த உத்தரவை தங்கள் அறிவிப்புப் பலகைகளில் அனைவரும் அறியும் வகையில் தெளிவாகப் பிரசுரிக்க வேண்டும். மேலும், ஏழு வேலை நாள்களுக்குள் தங்கள் அதிகாரபூா்வ இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தில்லி பள்ளி கல்விச் சட்டம், 1973இன் கீழ், இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது அங்கீகாரத்தை ரத்து செய்தல் அல்லது பள்ளி நிா்வாகத்தையே அரசே ஏற்று நடத்துதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் .

கல்விக்கான சமமான வாய்ப்பை உறுதி செய்யவும், பெற்றோா்களின், குறிப்பாகக் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவைச் சோ்ந்த பெற்றோா்களின் நலன்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.