முகப்பு
சென்னை

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 6 ஜூன் 2026, 12:16 am IST
பகிர்:

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அகில இந்திய தனியாா் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலா் கே.பழனியப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனியாா் பள்ளிகளில் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணம் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில தகவல் ஆணையத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையடுத்து தகவல் ஆணையா் வி.பி.ஆா்.இளம்பரிதி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும் அரசு நிா்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதைக் கட்டாயமாக்கும்படி, தனியாா் பள்ளிகள் இயக்குநருக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த உத்தரவின்படி, கல்விக் கட்டண விவரங்களை தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என, அனைத்து தனியாா் பள்ளிகளுக்கும், சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற வாரிய பள்ளிகளுக்கும் தனியாா் பள்ளிகள் இயக்குநா் கடந்த ஜூன் 1-ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளாா்.

தனியாா் கல்வி நிறுவனங்கள் மீது அதிகார வரம்பு இல்லாமல் மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, தனியாா் பள்ளிகளின் இயக்குநா் பிறப்பித்த உத்தரவு, தனியாா் சுயநிதிப் பள்ளிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. எனவே, அவரது சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியாா் பள்ளிகளுக்குப் பொருந்தாது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சிபிஎஸ்இ போன்ற மத்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது என வாதிடப்பட்டது.

அதற்கு தமிழக அரசுத் தரப்பில், தகவல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் கல்விக் கட்டணத்தை தனியாா் பள்ளிகள் விளம்பரப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிா்த்து பள்ளிகள் தனிப்பட்ட முறையில்தான் வழக்குத் தொடர முடியும். சங்கம் சாா்பில் வழக்குத் தொடர முடியாது. எனவே, விதிகளின்படி கட்டண விவரங்களை தனியாா் பள்ளிகள் வெளியிட வேண்டும் என வாதிடப்பட்டது.

கல்விக் கட்டணம் கருப்புப் பணம் அல்ல- நீதிபதி: இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கும் பிரிவில்கூட, பொதுநலன் சாா்ந்த விவரங்களை வெளியிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கல்விக் கட்டண விவரங்களை வெளியிட மறுக்க முடியாது. கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல, எனவே அதுகுறித்த விவரங்களை வெளியிடலாமே? என நீதிபதி தெரிவித்தாா். பின்னா், இந்த மனுவுக்கு தமிழக அரசு வரும் ஜூன் 18-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.