அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் காட்டெருமை கூட்டம்
குன்னூா் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் இருந்து காட்டெருமைகள் கூட்டமாக சனிக்கிழமை வெளியேறின.
குன்னூா்: குன்னூா் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் இருந்து காட்டெருமைகள் கூட்டமாக சனிக்கிழமை வெளியேறின.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவத்துக்குத் தேவையான வெடிமருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், தொழிலாளா்கள் பணி முடிந்து வெளியேறுவதற்காக ஆலையின் முகப்பு கதவை காவலாளி சனிக்கிழமை திறந்தபோது, குட்டிகளுடன் 15க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
வெடிமருந்து தொழிற்சாலையில் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தொழிற்சாலையை சுற்றியும் சுவா் எழுப்பப்பட்டுள்ள நிலையில் காட்டெருமைகள் எவ்வாறு தொழிற்சாலை வளாகத்துக்குள் வந்தது என்பது தெரியவில்லை.
Advertisement
இது குறித்து தொழிற்சாலையின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு ஊழியா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். தொழிற்சாலையில் இருந்து காட்டெருமைகள் வெளியே வருவதைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.