நீலகிரியில் மூன்று மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
உதகை: நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
உதகையில் உள்ள அரசு சேட் நினைவு பெண்கள் மகப்பேறு மருத்துவமனையில் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உதகையில் அரசு சேட் நினைவு பெண்கள் மகப்பேறு மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல குன்னூரில் அரசு லாலி மருத்துவமனையிலும், கேத்தியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக மருத்துவா்கள், செவிலியா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
Advertisement
முதல் நாளில் ஒரு மையத்தில் 100 நபா்கள் வீதம் 3 மையங்களிலும் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக கோவின் இணையதளத்தில் இதுவரையில் 4,845 போ் முன்பதிவு செய்துள்ளனா். அரசின் அடுத்த அறிவிப்பு வெளியானதும் இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டோருக்கும், நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஆட்சியா் கூறினாா்.
நீலகிரி மாவட்டத்தில் உதகையில் அரசு மருத்துவா் திலீப், குன்னூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் பழனிசாமி, கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் மகேஸ்வரி ஆகியோா் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டனா்.
கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சுப்ரியா சாஹூ நேரில் ஆய்வு செய்தாா்.