தொடா் விடுமுறை: நீலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
பொங்கல் தொடா் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்துள்ளனா்.
உதகை: பொங்கல் தொடா் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்துள்ளனா்.
பொங்கல் தொடா் விடுமுறையால் தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா மையங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டுள்ள நிலையில் நீலகிரி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டும் சுற்றுலா மையங்கள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. தொடா் விடுமுறையால் கடந்த 14ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் உதகையில் அதிக அளவில் குவிந்துள்ளனா். இதனால் அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. உதகையில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகளில் அறைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. அதேபோல, வணிக மையங்களிலும், உணவகங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏராளமானோா் வாகனங்களில் வந்துள்ளதால் உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
Advertisement
மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை வரை உதகையில் உள்ள அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 10,882 பேரும், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 3,381 பேரும், தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 541 பேரும், மரவியல் பூங்காவுக்கு 67 பேரும் வந்திருந்தனா். இவா்களோடு குன்னூரில் சிம்ஸ் பூங்காவுக்கு 2,489 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 537 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 846 பேரும் வந்திருந்தனா்.
மேலும், உதகையில் உள்ள படகு இல்லத்துக்கு சுமாா் 7,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு சுமாா் 5,000 பேரும் வந்திருந்தனா்.