மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை
மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை - செ.திவான்; பக்.125; ரூ.100; சுகைனா பதிப்பகம், பாளையங்கோட்டை; )0462-2572665. மகாகவி பாரதியின் எழுத்துக்கு நூறு வயதாகிவிட்டது என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது. அவரு
மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை - செ.திவான்; பக்.125; ரூ.100; சுகைனா பதிப்பகம், பாளையங்கோட்டை; )0462-2572665.
மகாகவி பாரதியின் எழுத்துக்கு நூறு வயதாகிவிட்டது என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது. அவருடைய உரைநடை அத்தனை சமகாலத்துவம் உடையதாக உள்ளது. அதேபோல விஷயங்களை அணுகும் முறையில் காணப்படும் அவருடைய மன விசாலம் இன்றும் பின்பற்றத் தக்கது.
தொழில்நுட்ப சாதனங்கள் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் கையில் கிடைத்த ஒரு சில ஆங்கிலத் தினசரிகளைக் கொண்டு உலகில் நடந்த அன்றாட விஷயங்களைத் தெரிந்து கொண்டு பொது அறிவை வளர்த்துக் கொண்டவர் அவர். சிறந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்த பாரதி தன் எழுத்தில் தொடாத விஷயமே இல்லை என்று துணிந்து கூறலாம்.
அவருடைய காலகட்டத்தில் நடைபெற்ற அனைத்து உலக விஷயங்களைக் குறித்தும் சுருக்கமான நேரத்தில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரும் அளவுக்கு அவருக்கு தீர்க்கமான சிந்தனை இருந்தது.
அவர் எழுதிய எழுத்துகளில் இஸ்லாம் பற்றி உள்ளவற்றையெல்லாம் தொகுத்து ஒரு தனிப் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார் செ.திவான். பாரதி அன்பரான திவான் பதிப்பித்துள்ள நான்காவது பாரதி குறித்த புத்தகம் இது. இஸ்லாம் பற்றி தன்னுடைய கவிதைகளிலும் உரைநடையிலும் பாரதி எழுதியுள்ளவை எல்லாம் ஒரே புத்தகமாகக் கிடைப்பது ஒரு புதிய முயற்சிதான். ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், சாதாரண வாசகருக்கும் மகாகவியின் மனதை அறிய உதவும் அருமையான புத்தகம்.