18 பேர் பலி! ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கை
தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றுவது குறித்து...
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைப்பேர் கிராம பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அமோனியா வாயுவை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் பணியானது இரண்டாவது நாளாக (ஜூலை 5) மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை ஆட்சியர் ச.கவிதா மற்றும் அதிகாரிகளுடன் முகாமிட்டு உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதற்காக முன்னெச்சரிக்கையாக கன்னிக்கைப்பேர் கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அதேபோல், 300 மீட்டர் தொலைவில் உள்ள தொழிற்சாலைகளும் அடைக்கப்பட்டன. மேலும், போக்குவரத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால், அந்தப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
பின்னர் இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கன்னிகைப்பேர் கிராமத்தில் பகுதியில் செயல்படும் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் அமோனியா வாயு வெளியானதைத் தொடர்ந்து, 83 பேர் பாதிக்கப்பட்டனர். இதை சுவாசித்த பெண் தொழிலாளர்கள் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Advertisement
Advertisement
அந்த நிறுவனத்தில் சேமிப்புத் தொட்டிகளில் ஒன்றரை முதல் இரண்டு டன் அமோனியாவை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இப்பணியானது சனிக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி நடைபெற்றது. அப்போது, சேமிப்புத் தொட்டிகளில் இருந்து நடமாடும் சேமிப்புத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு முதல் குழாய்களில் சேமிக்கப்பட்டுள்ள அமோனியா வாயு குளிர்விக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது. இதை நடமாடும் சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கும் பணிகள் இன்று நடைபெறுகிறது.
இப்பணிகள் அனைத்தும் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும். இன்று மாலைக்குள் முடியாத பட்சத்தில் நாளையும் பணிகள் தொடரும். போக்குவரத்தில் மாற்றம் செய்ய இரவு இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை அவசர காலத்தை எதிர்நோக்கி தொழிற்சாலை முன்புறம் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகன குழுக்கள், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், மாசு கட்டுப்பாடு வாரியம், தொழிலகப் பாதுகாப்பு (ம) சுகாதார இயக்ககம் மற்றும் 15 பேர் கொண்ட தனியார் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவசர கால மீட்பு பணிகளில் ஈடுபடும் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது, உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) பி.பவித்ரா (திருவள்ளூர்), மாவட்ட சுகாதார அலுவலர் (திருவள்ளூர்) மரு.பிரியா ராஜ், மாசுகட்டுபாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (திருவள்ளூர்) செல்வ இளவரசி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) த.தணிகாச்சலம், கோட்டாட்சியர் எஸ்.ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சி (ம) தனிக்கை) (கிழக்கு) பஞ்சு, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராஜேஷ்குமார், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அற்புதராஜ் (வ.ஊ), செல்வகுமார்(கி.ஊ), பல்துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளின் தொழில்நுட்ப வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஆகியோர் உடனிருந்தனர்.
Tiruvallur: Operations to remove ammonia gas from the plant continue for the second day
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.