ஃபிரடெரிக் அகஸ்டஸ் நிக்கல்சன் (1846-1936)
இந்தியாவில் பணியாற்றி இங்கேயே மறைந்தார் நிக்கல்சன். அவர், வீரமாமுனிவர், கால்டுவெல், பென்னிகுயிக், ஜி.யு.போப் போன்றோர் போல போற்றத்தக்கவர் எனும் கருத்துக்கு வலுவான ஆவணமாக இந்த நூல் அமைந்துள்ளது.
ஃபிரடெரிக் அகஸ்டஸ் நிக்கல்சன் (1846-1936)- ஓர் ஐசிஎஸ் அலுவலரின் வாழ்வும் பணிகளும்- க.சிவாஜி; பக். 284; ரூ. 480; நிர்மலா பதிப்பகம்; சென்னை 600 099, ✆ 94437 28099.
ஆங்கிலேய ஐசிஎஸ் அலுவலரான ஃபிரடெரிக் அகஸ்டஸ் நிக்கல்சன், இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். சென்னை மாகாணத்தின் முதல் மீன்வளத் துறை இயக்குநராகப் பணியாற்றியவர். விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தமிழ் மொழிக்கு நவீன அகராதி ஒன்றைத் தயாரிப்பதற்கும் அவர் முன்னெடுத்த முயற்சிகள் குறித்து ஆராய்கிறது இந்த நூல்.
கோவை மாவட்டத்துக்காக நிக்கல்சன் தயாரித்த நடைமுறை நூல் 1887-இல் வெளியிடப்பட்டது. இந்த நூலில் நிக்கல்சன் எழுதியிருந்த நில வருவாய், வரலாறு, விவசாயம், பொருளாதார நிலை ஆகியவை செம்மையான ஆவணம் என, 1932-இல் அதன் மீள்பதிப்பு நூலை திருத்தங்களுடன் வெளியிட்ட ஏ.எஃப்.காக்ஸ் எனும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் நிக்கல்சன் ஆய்வு செய்து சென்னை மாகாண அரசாங்கத்துக்கு சமர்ப்பித்த ஆய்வறிக்கையே இந்தியாவில் கூட்டுறவு சங்கம் ஏற்பட அடிப்படையாக அமைந்திருந்தது.
நிக்கல்சன் 1869 முதல் 1904 வரை 34 ஆண்டுகள் இந்தியாவில் அரசுப் பணியில் இருந்தார். தனது பணி ஓய்வுக்குப் பிறகும், தான் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து சிந்தித்தார். இதன் தொடர்ச்சியாக 1905-இல் மீன்வளத் துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு, மீன்வளத் துறையைக் கட்டமைத்தார் எனும் அறியும்போது அவர் மீதான மரியாதை அதிகரிக்கிறது.
இந்தியாவில் பணியாற்றி இங்கேயே மறைந்தார் நிக்கல்சன். அவர், வீரமாமுனிவர், கால்டுவெல், பென்னிகுயிக், ஜி.யு.போப் போன்றோர் போல போற்றத்தக்கவர் எனும் கருத்துக்கு வலுவான ஆவணமாக இந்த நூல் அமைந்துள்ளது.