முகப்பு
தினமணி கதிர்

உயிரினங்களின் தோழிகள்!

வன உயிர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடுபவர்களுக்காக உலகளாவிய அதிகபட்ச அங்கீகாரமான 'பசுமை ஆஸ்கர்' எனும் 'வைட்லி விருது', இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 'வைட்லி ஃபண்ட் ஃபார் நேச்சர்' எனும் அமைப்பால் ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.

Updated On : 17 மே 2026, 4:07 am IST
பகிர்:

வன உயிர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடுபவர்களுக்காக உலகளாவிய அதிகபட்ச அங்கீகாரமான 'பசுமை ஆஸ்கர்' எனும் 'வைட்லி விருது', இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 'வைட்லி ஃபண்ட் ஃபார் நேச்சர்' எனும் அமைப்பால் ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. இதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற்ற ஆறு பேரில் பர்கா சுப்பா, பர்வீன் ஷேக் என்னும் இரு இந்தியப் பெண்களும் அடங்குபவர். அழிந்துவரும் உயிரினங்களைக் காப்பாற்றுவதில் ஆற்றிய பணிக்காக இந்த விருதை வென்றுள்ள இவர்கள், இதுநாள்வரை வெளிச்சத்துக்கு வராமல் பணியாற்றியவர்கள்.

பர்கா சுப்பா: இமயமலை நீர், நில வாழ் உயிரினமான சாலமண்டரைப் பாதுகாக்கும் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் பர்கா சுப்பா. ஆற்றையொட்டி வாழும் ஓர் அரிய பறவையான இந்த உயிரினம் இந்தியன் ஸ்கிம்மர் இனத்தைச் சேர்ந்தது. டார்ஜிலிங் மலைகளில் சுற்றுலா, கட்டுமானம், நிலப் பயன்பாட்டு மாற்றங்களால் ஈரநிலங்கள் சுருங்கி வரும் நிலையில், இனப்பெருக்கத் தளங்களில் சுமார் 30 உயிரினங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

'எனது பணி, உயிரினங்களைக் கண்காணிப்பதையும் தாண்டியும் செல்கிறது. ஈரநிலங்களை மீட்டெடுத்து, ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றி, முக்கிய வாழ்விடங்களைப் பாதுகாக்க உள்ளூர் மக்கள், தேயிலைத் தோட்டப் பணியாளர்கள், அரசுத் துறையினருடன் இணைந்து பணியாற்றுகிறேன். நீர், நில வாழ் உயிரினங்களை அழித்த ஒரு கொடிய பூஞ்சைத் தொற்றுக்கான அறிகுறிகள் இமயமலை சாலமண்டர் வாழும் இடங்களில் இருக்கிறதா என்று கண்காணிப்பதும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும். எனது குழுவில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். விருதோடு சுமார் ரூ.47 லட்சம் நிதியுதவியும் கிடைக்கும்' என்கிறார் பர்கா சுப்பா.

Advertisement

பர்வின் ஷேக்: தெற்கு ஆசியாவின் பல பகுதிகளில் அதிகமாக இருந்த இந்திய ஸ்கிம்மர் பறவைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. வாழ்விட இழப்பு, மாசு, மணல் திருட்டு, ஆறு மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றால் இந்தப் பறவைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. எஞ்சியிருக்கும் பறவைகளைக் காப்பதில் ஈடுபட்டுள்ள பர்வின் ஷேக்கின் பணியைத் தனித்துவமாக்குவது அவரது அணுகுமுறையே.

'ஆராய்ச்சியை மட்டும் நம்பியிருக்காமல், சம்பல் ஆற்றங்கரையில் கூட்டுக் காவலர்களை உருவாக்கினேன். இவர்கள் பறவைகள் கூடு கட்டும் இடங்களைக் கண்காணித்து, முட்டைகளைப் பாதுகாத்து, இடையூறுகளைத் தடுக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் கூடுகள் தப்பிப்பிழைக்கும் விகிதம் இருமடங்காகியுள்ளது. உள்ளூர் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பல காவலர்கள் இந்தப் பறவைகளை 'நமது பறவைகள்' என்று குறிப்பிடும் அளவுக்கு பறவைகளிடத்தில் அன்பைக் காட்டுகின்றனர். இந்த விருதுடன் வழங்கப்படும் நிதியுதவியை எனது பாதுகாப்புக் குழுவினருடன் இணைந்து கங்கை படுகைக்கும் விரிவுபடுத்தவும், பாதுகாப்பான கூடுகள் கட்டவும் திட்டமிட்டுள்ளேன்' என்கிறார் பர்வீன் ஷேக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.