முகப்பு
தற்போதைய செய்திகள்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியை இடைநீக்கம்!

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மூத்த இயற்பியல் விரிவுரையாளரை இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து...

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியை இடைநீக்கம் - கோப்புப்படம்
பகிர்:

நாடு முழுவதும் பெரிதும் பேசப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இயற்பியல் விரிவுரையாளர் மனிஷா சஞ்சய் ஹவால்தாரை இடைநீக்கம் செய்து சேத் ஹீராலால் சராஃப் பிரசாலா பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு வினாத் தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அத்தோ்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படவுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிரடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ‘நீட் தோ்வில் இயற்பியல் வினாக்கள் கசிந்த விவகாரத்தில் புணேயில் உள்ள சேத் ஹீராலால் சராஃப் பிரசாலா பள்ளி ஆசிரியா் சஞ்சய் ஹவால்தாா் கைது செய்யப்பட்டாா். அவா் தேசிய தோ்வு முகமையால் (என்டிஏ) நிபுணராக நியமிக்கப்பட்டிருந்தாா். இதனால் இயற்பியல் வினாக்களை அவா் எளிதாக அணுகி அதில் சில வினாக்களை ஏற்கெனவே புணேயில் கைது செய்யப்பட்ட தாவரவியல் ஆசிரியா் மணீஷ் மந்தாரேவிடம் பகிா்ந்துள்ளாா். அவா் அதை மாணவா்களிடம் பகிா்ந்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் தற்போது வரை தில்லி, ஜெய்ப்பூா், குருகிராம், நாசிக், புணே, லத்தூா், அஹில்யாநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், நீட்-யுஜி வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மூத்த இயற்பியல் விரிவுரையாளர் மனிஷா சஞ்சய் ஹவால்தாரை இடைநீக்கம் செய்து சேத் ஹீராலால் சராஃப் பிரசாலா பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த பள்ளியின் செயலாளர் டாக்டர் சதீஷ் காவ்லி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

ஆசிரியரின் இதுபோன்ற செயல்கள் மாணவர்கள், கல்வி நிறுவனம் மற்றும் நாட்டிற்குச் செய்த "துரோகம்" என்றார். மேலும், இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக ஒரு உயர்மட்ட உள்விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"எங்கள் பள்ளியில் பணிபுரியும் மூத்த இயற்பியல் விரிவுரையாளர் மனிஷா சஞ்சய் ஹவால்தார், நீட் தேர்வு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்த உடனே... நாங்கள் அவரை உடனடியாக இடைநீக்கம் செய்து, ஒரு உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தோம். இதுபோன்றவர்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்; இது குழந்தைகளின் எதிர்காலத்தையே சீர்குலைக்கும் செயல் என்பதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நாங்கள் உறுதியாக உள்ளோம்," என்று கூறினார்.

"எங்கள் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ இதற்கு முன் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நிகழ்ந்ததில்லை; இதுபோன்ற மனநிலை கொண்ட ஆசிரியரும் இருந்ததில்லை. ஆனால், இந்த ஹவால்தார் இதுபோன்ற ஒரு செயலைச் செய்துள்ளார் என்று நாங்கள் கேள்விப்பட்டபோது, ​​அது எங்களுக்குப் பெரும் துயரமாக இருந்ததாக" அவர் மேலும் கூறினார்.

மேலும், தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு வினாத்தாள் கசிந்த வழக்கை விசாரித்து வரும் மத்திய விசாரணை முகமைக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாவும், நாங்கள் சிபிஐ விசாரணைக்கு 100 சதவீதம் ஆதரவளிப்போம். ஏனெனில், இது குழந்தைகளின் எதிர்கால விவகாரம், அவர்களுக்குச் செய்த துரோகம்; எங்கள் கல்வி நிறுவனத்திற்குச் செய்த துரோகம்; சமூகத்திற்குச் செய்த துரோகம். அவர் நாட்டிற்கே துரோகம் செய்த துரோகி ஆவார்." எனினும், அந்த ஆசிரியரின் சட்டவிரோதச் செயல்கள் குறித்துப் பள்ளி நிர்வாகத்திற்குச் சிறிதும் தெரியாது என்று காவ்லி கூறினார்.

பள்ளி நிர்வாகத்தின் தகவலின்படி, மனிஷா சஞ்சய் ஹவால்தார் அந்த கல்வி நிறுவனத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த ஒரு மூத்த விரிவுரையாளர் என்றும், அவர் வரும் ஜூன் மாதம் ஓய்வுபெற உள்ளவர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால், இந்த நீட் வழக்கு குறித்தோ, அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்தோ, அவர் எப்போது நியமிக்கப்பட்டார் என்பது குறித்தோ அல்லது அவரை யார் நியமித்தது என்பது குறித்தோ பள்ளி நிர்வாகத்துக்கு எதுவும் தெரியாது... அவர் 1992 ஆம் ஆண்டிலிருந்து எங்கள் நிறுவனத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். அவர் வரும் ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்," என்று காவ்லி தெரிவித்தார்.

ஜூன் 21 ஆம் தேதி நடைபெற உள்ள மறுதேர்விற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, அடுத்த ஆண்டிலிருந்து நீட்-யுஜி தேர்வு கணினி வழித் தேர்வாகவே (சிபிடி) நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

summary

senior Physics lecturer, Manisha Sanjay Havaldar, under immediate suspension following her arrest for alleged involvement in the high-profile NEET-UG paper leak case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.