நீட் வினாத்தாள் கசிவு: மருத்துவர், இயற்பியல் ஆசிரியர் கைது!
நீட் யுஜி வினாத்தாள் கசிவு வழக்கில், மருத்துவர், புணே பயிற்சி மையத்தின் இயற்பியல் ஆசிரியர் கைது குறித்து...
நீட் யுஜி வினாத்தாள் கசிவு வழக்கில், லாத்தூரைச் சேர்ந்த ஒரு மருத்துவரையும், புணேயில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் இயற்பியல் ஆசிரியரையும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்த நிகழ்வு குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான, மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் உள்ள ஆர்.சி.சி. பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளரும் பேராசிரியருமான சிவராஜ் மோட்டேகான்கர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
இவர், நீட் தேர்வுக்காக மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஒன்பது கிளைகள் கொண்ட இந்த நிறுவனத்தின் முக்கிய கிளை லாத்தூரில் அமைந்துள்ளது.
இதனிடையே, அவரது நிறுவனம் மற்றும் இல்லத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், நீட் தேர்வில் கேட்கப்பட்ட அதே கேள்விகளைக் கொண்ட வேதியியல் வினா வங்கி மீட்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை தில்லி, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், புணே, லாத்தூர் மற்றும் அஹ்லியநகர் ஆகிய இடங்களில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, 9 பேர் காவலில் எடுக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நீட் யுஜி வினாத்தாள் கசிவு வழக்கில், லாத்தூரைச் சேர்ந்த ஒரு மருத்துவரையும், புணேயில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் இயற்பியல் ஆசிரியரையும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
மகாராஷ்டிரம் மாநிலம் லாத்தூரில் உள்ள ஆர்.சி.சி. பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் சிவராஜ் மோட்டேகான்கரின் மகன் உள்பட மூன்று மாணவர்கள், நீட் வினாத்தாள் அமைப்பாளரான பி.வி. குல்கர்னியிடமிருந்து வேதியியல் பாட வினாக்களைப் பெறுவதற்குத் துணைபுரிவதில் முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படும் மனோஜ் ஷிருரே என்பவரை சிபிஐ கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.