மகாராஷ்டிர ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்: மேலும் 3 பேர் கைது
மகாராஷ்டிர ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...
மகாராஷ்டிர ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
மகாராஷ்டிரத்தில் ஞாயிற்றுக்கிழமையில் (ஜூன் 28) 1,028 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, தாணேவில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வினாத்தாளின் சில பகுதிகள் கசிவு உறுதிசெய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 27 நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 ஒரு நாளுக்கு முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, வினாத்தாள் கசிவு விசாரணை குறித்து மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, சோனு சிங், மிதுன் சிங் மற்றும் கபில் தஹியா ஆகியோரைக் கைது செய்தது. இவர்கள் மூவரும் வியாழக்கிழமை உள்ளூர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர்.
இதையடுத்து வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட கும்பலின் வலைப்பின்னல் தில்லி, ஆக்ரா, பிகார் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்கள் வரை பரவியிருப்பதை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
முன்னதாக, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விஜேந்திர குப்தாவின் மனைவி சுமன் குமாரி குப்தாவை, தொலைபேசி அழைப்புப் பதிவுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் மூலம் விஜேந்திர குப்தாவுடன் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, பாட்னாவில் வைத்து சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது.
விஜேந்திர குப்தா மற்றும் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை பிடிப்பதற்காக பல்வேறு மாநிலங்களுக்குத் தனிப்படைகளை சிறப்புப் புலனாய்வுக் குழு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீட் யுஜி வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிர ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவுச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது; இது போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மை குறித்த புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பணிபுரியும் ஆசிரியர்கள் உள்பட 4.28 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The Maharashtra Police have arrested three more suspects in the alleged Teacher Eligibility Test (TET) 2026 question paper leak case, taking the total number of arrests to seven, officials said on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.