நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து...
தேர்வு நடத்துவது குறித்து யுபிஎஸ்சியிடம் இருந்து தேசிய தேர்வு முகமை கற்றுக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு மூலமாக லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதைந்துள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் எனக் கோரிய மனு, இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் அரதே அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய தேர்வு முகமையின் தற்போதைய நிலைக்கு கவலை தெரிவித்த நீதிபதிகள், நம் நாட்டின் இளைஞர்களை ஏமாற்றக் கூடாது என்றும் இதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்ளாவிட்டால் மீண்டும் மீண்டும் சிக்கல் எழும் என்றும் கூறினர்.
மேலும், "வினாத்தாள் கசிவு இல்லாமல் பெரிய அளவிலான போட்டித் தேர்வுகளை நடத்தும் யுபிஎஸ்சி போன்ற அமைப்புகளிடமிருந்து தேசிய தேர்வு முகமை(என்டிஏ) பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். யுபிஎஸ்சியில் இதுபோன்ற ஒரு நிலை இதுவரை ஏற்படவில்லை. தேசிய தேர்வு முகமை இதனைக் கற்றுக்கொள்வது அவசியம்.
பிரச்னை என்னவென்றால் பெரும்பாலான அமைப்புகள் தற்காலிகமானவை. இது நாடு முழுவதும் காணப்படுகிறது. தனிநபர்களின் திறமையைவிட தேர்வு முகமையின் கட்டமைப்பு முக்கியம்.
நீட் வினாத்தாள் கசிவு மேலும் நிகழ்ந்தால் பொறுப்பு யார் என நிர்ணயிக்க வேண்டும்" என்று கூறி,
தேசிய தேர்வு முகமையை எப்படி வலுப்படுத்துவது, நீட் தேர்வை எந்த பிழையும் இல்லாமல் எப்படி நடத்துவது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பிரதமர் நரேந்திர மோடியே இவ்விவகாரத்தை நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும் இளைஞர்களின் கவலை குறித்து அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
NEET-UG 2026 Cancellation: UPSC Never Had Paper Leak, NTA Needs To Learn: Supreme Court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.