நீட் வினாத்தாள் கசிவு: குற்றம் சாட்டப்பட்ட இருவரின் காவல் நீட்டிப்பு!
நீட் வினாத்தாள் கசிவில் 2 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டது தொடர்பாக..
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி மற்றும் பயிற்சி மைய நிறுவனர் உள்பட இருவரின் நீதிமன்றக் காவலை ஜூலை 11 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பி.வி. குல்கர்னி மற்றும் ரேணுகாய் கேரியர் சென்டர் நிறுவனர் சிவராஜ் ரகுநாத் மோட்டேகான்கர் ஆகியோர் இன்று பிற்பகலில் சிறப்பு நீதிபதி அஜய் குப்தா முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், அவர்களின் இருவரின் நீதிமன்றக் காவலை நீட்டிக்க சிபிஐ கோரியதை நீதிபதி குப்தா ஏற்றுக்கொண்டார்.
Advertisement
Advertisement
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரைச் சேர்ந்தவரும், வேதியியல் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவருமான குல்கர்னி, பல ஆண்டுகளாக நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக புணேவில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
மோட்டேகான்கர் மே மாதம் லத்தூரில் கைது செய்யப்பட்டார். சோதனையின்போது, மே 3 அன்று நடைபெற்ற தேர்வின் கசிந்த வினாத்தாள் அவரது தனிப்பட்ட கைபேசியிலிருந்து கைப்பற்றப்பட்டதாக விசாரணை முகமை தெரிவித்தது.
வினாத்தாள் கசிவு, விநியோகத்தில் ஈடுபட்டிருந்த திட்டமிட்ட கும்பலில் அவர் ஒரு தீவிர உறுப்பினராக இருந்ததாகவும், தனது பயிற்சி மையம் மூலம் வினாத்தாள் மற்றும் விடைகளை விநியோகிப்பதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது.
இந்த வழக்கில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்களுக்கு மத்தியில், மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கைக்காக மே 3 அன்று நடத்தப்பட்ட 'தேசிய நுழைவுத் தேர்வை' தேசியத் தேர்வுகள் முகமை மே 12 அன்று ரத்து செய்தது. அதன்பிறகு, ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.