தியாகப் பாதை பரம்வீர் சக்ரா
பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்கள், அவர்களின் சாகசங்கள் குறித்த உணர்வுபூர்வமான கட்டுரைகள் ஒரேமூச்சில் படித்துமுடிக்கத் தூண்டுகின்றன.
தியாகப் பாதை பரம்வீர் சக்ரா- பி.கே.ராமச்சந்திரன்; பக். 160; ரூ.190; சுவாசம் பதிப்பகம்; சென்னை -600127; ✆ 81480 66645.
தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக மாபெரும் வீர தீரச் செயல்களைச் செய்யும் ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் கௌரவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா. நாடு சுதந்திரம் அடைந்த 79 ஆண்டுகளில் இதுவரை 21 வீரர்களுக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் வீரதீர சாகசங்களை தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர்.
பரம்வீர் சக்ரா விருதை முதன்முதலில் பெற்றவர் மேஜர் சோம்நாத் சர்மா. இந்தியா சுதந்திரமடைந்தவுடன் காஷ்மீரைக் கைப்பற்ற பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் ஊடுருவிய பட்டாணியர்களை குறைந்த வீரர்களுடன் எதிர்த்து நின்று வீழ்த்தி தனது உயிரைத் தியாகம் செய்தவர். உயிரோடு இருக்கும்போதே பரம்வீர் சக்ரா விருதைப் பெற்ற முதல் வீரர் லான்ஸ் நாயக் கரம் சிங். சீக்கிய படைப் பிரிவைச் சேர்ந்த இவர், காஷ்மீரில் 1948-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகக் காட்டிய வீரம் இந்திய ராணுவ வீரர்களின் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
Advertisement
Advertisement
பரம்வீர் சக்ரா விருது மட்டுமல்லாது மஹாவீர் சக்ரா, கீர்த்தி சக்ரா, அசோக சக்ரா, வீர் சக்ரா போன்ற விருதுகளையும் வடிவமைத்தவர் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஈவ் யவோனே மாதேய் டி மரோஸ் என்ற பெண்மணி என்பது வியப்பான தகவல்.
பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்கள், அவர்களின் சாகசங்கள் குறித்த உணர்வுபூர்வமான கட்டுரைகள் ஒரேமூச்சில் படித்துமுடிக்கத் தூண்டுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.