முகப்பு
புதுச்சேரி

போதையில் ரகளை: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கைது

குடிபோதையில் ரகளை செய்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக தனியார் மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 11:18 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

குடிபோதையில் ரகளை செய்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக தனியார் மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 3 பேர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அண்ணா சாலையில் பெரியகடை காவல்நிலைய காவலர் வேணுகோபால் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது காரில் வந்தவர்களைச் சோதனையிட முயன்றபோது, போதையில் இருந்த அவர்கள் இறங்க மறுத்து தகராறு செய்தனராம். தகாத வார்த்தைகளால் பொதுமக்களைத் திட்டியதுடன், மதுபாட்டில்களை உடைத்து ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக உதவி ஆய்வாளர் சஜீத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு சென்று அவர்களைக் கண்டித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வாகனத்தில் ஏற்ற முயன்றார். போதையில் இருந்த மாணவர்கள் வாகனத்தில் ஏற மறுத்து ரகளை செய்ததால், உதவி ஆய்வாளருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisement

இதைத் தொடர்ந்து, கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு ஐந்து பேரும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விசாரணையில் அவர்களில் 3 பேர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் என்பதும், பயிற்சிக் காலத்தில் இருப்பதும் தெரியவந்தது. மற்ற இருவரில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்.

அவர்கள் மீது குடிபோதையில் தகராறு செய்தல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் என்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் (வடக்கு) ராமராஜுவிடம் கேட்டபோது, இறுதியாண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் என்பதால், அவர்களின் எதிர்கால நலன் கருதி, மனிதாபிமானத்துடன் சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை ஜாமீனில்விட முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிந்து, கைது செய்திருந்தால், ரௌடிகளும், பெரும் குற்றவாளிகளும் உள்ள சிறையில் அடைக்க நேரிட்டிருக்கும். அது அவர்களின் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதிக்கும். போதையில் செய்தாலும் தவறு, தவறுதான். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை அவர்கள் செய்யக் கூடாது என எச்சரித்து, வழக்குப் பதிந்திருக்கிறோம். அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.