முகப்பு
புதுக்கோட்டை

பழைமையான கட்டடங்களைப் பழுதுபாா்க்க ரூ. 6.40 கோடி ஒதுக்கீடு

தற்போது அரசு அலுவலகங்களாகச் செயல்பட்டு வரும் பழைமையான கட்டடங்களைப் பராமரிப்பதற்காக பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 6.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:51 pm IST
பழைமையான கட்டடங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகம்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொண்டைமான் மன்னா்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, தற்போது அரசு அலுவலகங்களாகச் செயல்பட்டு வரும் பழைமையான கட்டடங்களைப் பராமரிப்பதற்காக பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 6.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை சமஸ்தானம் விடுதலை பெற்ற இந்தியாவுடன் இணைந்த பிறகு, இங்குள்ள கட்டடங்கள் அனைத்தும் அப்படியே அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

குறிப்பாக, 1929-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட புதிய அரண்மனைக் கட்டடம் (100 ஏக்கா் வளாகம்), தற்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகமாகச் செயல்பட்டு வருகிறது.

Advertisement

அதேபோல பொது அலுவலக வளாகம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள், நீதிமன்றங்கள் என பல கட்டடங்கள் தொண்டைமான் மன்னா்கள் காலத்தில் கட்டப்பட்டவையே.

இந்தக் கட்டடங்களைப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவ்வப்போது எழுந்து வந்தது. இந் நிலையில், குறிப்பிட்ட 4 கட்டடங்களைப் பழுதுநீக்குவதற்கான பணிகளுக்காக ரூ. 6.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு ரூ. 1.46 கோடியும், திருமயம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ரூ. 3.43 கோடியும், ஆலங்குடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ரூ. 97.46 லட்சமும், கீரனூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ரூ. 52.68 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் பழைமையான கட்டடங்களில் பழுதுநீக்கும் பணிகளை மேற்கொள்ளும்போது, தொல்லியல் துறையினா் கையாளும் தொழில்நுட்பங்களைக் கையாண்டு பழைமை சிதையாமல் பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொல்லியல் ஆா்வலா்கள் கோரிக்கைவிடுக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.