ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் புதிய கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் புதிய கொடி மரத்துக்கு மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் புதிய கொடி மரத்துக்கு மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சுவாமி சன்னதி எதிர்புறம் உள்ள கம்பத்தடி மணடபத்தில் திருக்கோயில் கொடிமரம் உள்ளது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான கொடிமரம் சேதமடைந்ததால், அதை மாற்றி புதிய கொடிமரம் அமைக்க திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணனுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, திருக்கோயில் இணை ஆணையர் பி.ஜெயராமன் ஆலோசனைப்படி புதிய கொடிமரம் கடந்த ஜூன் 12-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கொடிமரத்தின் மேல் தாமிரத் தகடு பொருத்தி அதன் மீது தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக திருக்கோயில் சார்பில் 11 கிலோ தங்கம் வழங்கப்பட்டது. ஆகம விதிப்படி நிறுவப்பட்ட கொடிமரத்துக்கான மகா கும்பாபிஷேகத்துக்கான யாகசாலைப் பூஜைகள் திங்கள்கிழமை இரவு தொடங்கின. இருகாலப் பூஜைகள் நிறைவுபெற்று புதன்கிழமை காலை 6.10 மணிக்கு கொடிமரத்தின் மீது சிவாச்சாரியார்கள் பூஜைசெய்யப்பட்ட புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
Advertisement
Advertisement
முதல்வர் வாழ்த்து: கும்பாபிஷேகத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய வாழ்த்துச் செய்தி: பல புராண இலக்கியங்களைக் கொண்டதும், பெண்மைக்குப் பெருமை சேர்ப்பதுமான உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் புதிய கொடிமர திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். பூலோக கைலாசம் என அழைக்கப்படும் இத் தலத்தின் பெயரைக் கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்பர். கொடிமரத்தை வணங்கினால் கோயிலில் உள்ள அனைத்துத் தெய்வங்களையும் வணங்கியதற்குச் சமமாகும். முக்கியத்துவம் வாய்ந்த கொடிமரத்துக்கு திருக்குட நன்னீராட்டு விழா என்பது அரிய நிகழ்வாகும். ஆகவே, தமிழுக்குப் பெருமை சேர்த்த மதுரை நகரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் விழா நடைபெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.
முளைக்கொட்டு உற்சவம்: திருக்கோயில் புதிய கொடிமரம் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 11) காலை ஆடிமுளைக்கொட்டு உற்சவத்துக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.