திருநெல்வேலி: ஆசியாவில் மிகவும் பழமையான நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட விழா ஜூலை 7-ம் தேதி விமரிசையாகத் தொடங்க உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு தேரை தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்மரம் காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் கோயிலில் ஆனித் தேரோட்ட விழா நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இந்தாண்டு ஜூலை 7-ம் தேதி கேட்டை நட்சத்திரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்க உள்ளது. பத்து நாட்கள் நடைபெறும்
இந்த விழாவில் முதல் நாள் இரவு 7 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
2-ம் நாள், காலையில் வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி வீதி உலா வர, அம்பிகையும் வெள்ளி சப்பரத்தில் திருவீதி உலா வந்தார். இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலாவும், அவருடன் காந்திமதி அன்னையும் வெள்ளிக் கமல வாகனத்தில் திருவீதியுலா வருவது கண் கொள்ளாக் காட்சி.
3-ம் நாள், இரவில் சுவாமி தங்கப் பூத வாகனத்தில் திருவீதியுலா காட்சி. காந்திமதி கருணை விழிகளில் பார்த்தபடி, வெள்ளி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வருவார்.
4-ம் நாள் காலையில் வெள்ளி குதிரை வாகனத்தில் நெல்லையப்பரும், வெள்ளி காமதேனு வாகனத்தில் காந்திமதி அம்பாளும் திருவீதியுலா வருவார்கள். இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவது சிறப்பு.
5-ம் காலையில் அதே வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதியுலா அன்று இரவு 8 மணி அளவில் இந்திர விமானத்தில் திருவீதி உலா வருவதைக் காணும் போது சிலிர்த்துப் போவார்கள் பக்தர்கள்.
6-ம் நாள், காலையும், மாலையும் வெள்ளி சப்பரத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.
இதைத்தொடர்ந்து 7-ம் நாள் காலை 8 மணிக்கு சுவாமி தந்தப் பல்லக்கில் வீதியுலா வருவார். அருள் மழை பொழிந்தபடி தன் முத்துப்பல் காட்டிச் சிரித்தபடி, முத்துப் பல்லக்கில் வீதியுலா வருவது சிறப்பு. காந்திமதி அம்பாள். அன்று இரவு சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா வருவார்கள்.
8-ம் நாள் காலை நடராஜப் பெருமான் எழுந்தருளல் நடைபெற்றது. உட்பிராகாரத்தில் உலா வருதல் நிகழ்ச்சியும் இரவில் பச்சை சாத்தியும் எழுந்தருள்வார்.
9-ம் நாள் காலை காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்ப சுவாமி திருத்தேரில் கம்பீரமாக அமர்ந்து வர, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, திருத்தேரோட்டம் சிறப்புற நடைபெறும்.
நூற்றுக் கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து வர, நான்கு மாடவீதிகளிலும் சூழ்ந்திருந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், ஹரஹர மகாதேவா என்றும் நமசிவாயம் என்றும் கோஷங்களை எழுப்பி பரவமடைவது கண்கொள்ளக் காட்சியாக விளங்கும். ஆனித் தேரோட்ட வைபவத்தின் நிறைவுநாள் தீர்த்தவாரி நடைபெறும்.