புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, ஏழுமலையானைத் தரிசிக்க திரளான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.
தமிழ் மாதங்களில் சிறப்பு பெற்றது புரட்டாசி. இந்த மாதத்தில் வைணவ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதுவும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றது. அன்றைய நாளில் வீட்டில் தளிகையிட்டு, பெருமாளை வழிபடுவது, கோவிந்த மாலை அணிந்து கொண்டு வைணவத் திருத்தலங்களுக்கு பாதயாத்திரை செல்வது போன்றவற்றில் ஈடுபடுவர். அதேபோல் ஏழுமலையானைத் தரிசிக்கவும் பக்தர்கள் திருமலைக்கு வருவர். அதன்படி, திருமலையில் சனிக்கிழமையன்று பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. காலையிலேயே காத்திருப்பு அறைகள் நிரம்பி, பக்தர்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், அன்னப் பிரசாதம் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் வழங்கியது.
இந்தக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமையும் இருக்கும் என தேவஸ்தானம் கருதுகிறது. அடுத்து வரும் வாரங்களில் பள்ளிகள் காலாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி, பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.