முகப்பு
செய்திகள்

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாகத் தொடங்கியது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:30 PM
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா - DPS
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:16 PM

மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடும் கொட்டகை முகூர்த்தத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தக்கால் நடும் கொட்டகை முகூர்த்த விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரைத் திருவிழா மிக முக்கியமானதாகும். அந்த வகையில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர்.

Advertisement

சிறப்புப் பெற்ற இவ்விழா வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தக்கால் ஊன்றும் கொட்டகை முகூர்த்த விழா கள்ளழகர் திருக்கோயிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆயிரம் பொன்சப்பரத்தில் பொருத்தப்படும் யாழி முகத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதற்காக அழகர் கோயிலில் உள்ள நூபுரகங்கையில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்கிட முகூர்த்தக்கால் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு கோயில் நுழைவு வாயிலில் முகூர்த்தகால் நடப்பட்டது.

கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தக்கால் நடப்பட்டதைத் தொடர்ந்து கள்ளழகர் மதுரை வரும்போது எழுந்தருளும் அனைத்து மண்டகப்படிகளிலும் இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா வரும் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் 27-ம் தேதி மீனாட்சி அம்மனுக்குப் பட்டாபிஷேகமும், 28-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், சிகர நிகழ்ச்சியாகத் திருத்தேரோட்டம் வரும் 29-ம் தேதியும் நடைபெறுகிறது. மதுரையில் கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியுள்ள நிலையில் நகரமே விழாக்கோலம் பூணத் துவங்கியுள்ளது.

summary

The Mukurtakkal (ceremonial pillar-planting) ceremony marking the commencement of the Chithirai Festival at the Kallazhagar Temple in Madurai began with great grandeur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.