மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநாகரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது
மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வில் அநாகரிக செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வில் அநாகரிக செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் எழுந்தருளல் நிகழ்வின்போது யாரும் அநாகரிகமான செயல்களில் ஈடுபடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. அநாகரிக செயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வின்போது, சிலர் கூட்டத்தின் நடுவே காலணிகளை வீசுவது உள்ளிட்ட சில அநாகரிக செயல்களில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மதுரையில் உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நாளை (மே 1) நடைபெறவுள்ளது. மதுரை ஆழ்வார்புரம் ஏவி மேம்பாலம் அருகே உள்ள வைகை ஆற்றில் அதிகாலை 5.35 - 5.55 மணிக்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் அழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு அன்று இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.