மதுரை கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம்!
மதுரை அழகர்கோயில் கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றதைப் பற்றி...
மதுரையை அடுத்த அழகர் கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆரவாரத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவத் திருத்தலங்களில் திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி புகழப்படும் வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் மிகவும் பிரபலம்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதத்தில் நடக்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது.
Advertisement
Advertisement
10 நாள்கள் நடக்கும் இந்த திருவிழா கடந்த ஜூலை 22-ஆம் தேதி மங்கள இசையுடன், பட்டர்களின் வேதமந்திரம் முழங்க வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அந்த வகையில் ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில், ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு நடத்தப்படும் பிரம்மோற்சவப் பெருந்திருவிழாவும் பிரசித்தி பெற்றதாகும். இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னர், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜப் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினர். இதைபடுத்து மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா... கோவிந்தா...’ என முழக்கங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேர்த்திருவிழா நடைபெறுவதையொட்டி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1,000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவையொட்டி ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர், மோர் ஆகியவை வழங்கப்பட்டன.
கள்ளழகர் கோயிலில் உள்ள 18-ஆம்படி கருப்பணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பவுர்ணமி அன்று மாலையில் திருநிலைக்கதவுகள் திறக்கப்பட்டு 18 படிகளுக்கும் பூஜை செய்து தீபாராதனை காண்பித்து கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படியாவது வழக்கம்.
அதன்படி, இன்று மாலை பதினெட்டாம்படி கருப்பணசாமி திருநிலை மணிக்கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படி நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கதவுகள் திறக்கப்பட்டு தீபங்கள் ஏற்றி படிப்பூஜை, சந்தன சாத்துபடி நடைபெறவுள்ளது.
The chariot procession of the Aadi Perunthiruvizha festival at the Kallazhagar Temple in Alagarkovil, near Madurai, took place on Wednesday. Thousands of devotees participated, enthusiastically pulling the chariot by its ropes.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.