மதுரை அழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றம்!
மதுரை அழகர்கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது பற்றி..
மதுரை அழகர்கோயில் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று "கோவிந்தா" கோஷம் முழங்கிடச் சுவாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை அழகர்கோவில் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்புப் பெற்ற விழாக்களில் முதன்மையான ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கி வரும் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
முன்னதாக ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிமரம் அமைந்துள்ள மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளியதைத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து தங்கக் கொடிமரத்தில் மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்கிட கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது.
ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருட வாகனம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் எழுந்தருளி கோவில் பிரகாரம் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அன்று அதிகாலை தேவியர்களுடன் சுந்தரராஜப்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகின்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெறும் சிறப்புப் பூஜைகளையடுத்து காலை 7.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. ஆடிப்பெருந்திருவிழா துவங்கியுள்ளதையடுத்து, கோவில் மண்டபத்தில் பல்வேறு சிறப்புக் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருத்தேரோட்ட வைபவத்தினை காண மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகர்மலையில் கூடுவர் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.