கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
கோவையில் மேளதாளங்கள் முழங்கக் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
கோவை மாநகரின் மிகப்பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான கோட்டை அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று காலை பக்திப் பெருக்குடன் மிக விமரிசையாக நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான இந்தத் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ சிவ கோஷமிட்டு வடம்பிடித்து இழுத்தனர். தேவாரப் பாடல்களின் இன்னிசையும், கயிலாய வாத்தியங்களின் முழக்கமும் ஆன்மிக அனுபவத்தைப் பக்தர்களுக்கு வழங்கியது. இன்று காலை ஈஸ்வரன் கோயிலில் இருந்து தேரோட்டம் புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி சங்கமேஸ்வரர் எழுந்தருள அவருக்கு முன்னால் 63 நாயன்மார்களின் சிலைகளும், செங்கோலும் திருவீதி உலாவாக எடுத்து வரப்பட்டன.
Advertisement
பாரம்பரிய சிவ வாத்தியங்கள் முழங்க, ஓதுவார்கள் தேவாரப் பாடல்களைப் பாட, பக்தர்கள் பரவசத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். இந்தத் தேரோட்டமானது கோட்டைமேடு வீதி வழியாகச் சென்று, உக்கடம் என்.எச். சாலை மற்றும் பெரிய கடைவீதி வழியாக வலம் வந்தது. சரியாக 11.30 மணி அளவில் தேர் மீண்டும் நிலையை வந்தடைந்த போது, கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்துத் தரிசனம் செய்தனர்.
மாநகரின் மிக முக்கியமான பகுதியான கோட்டைமேடு வழியாகத் தேர் சென்றதால், கோவை மாநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. துணை ஆணையாளர் கார்த்திகேயன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு அதிகாரிகள் தேரோட்டம் நடைபெறும் பாதையெங்கும் முன்னதாகவே பலத்த சோதனைகளை மேற்கொண்டனர்.