பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பற்றி..
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அன்னை பராசக்தி தவம் செய்ததும், சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கித் தனி சன்னதி கொண்டு எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும், லட்சுமி துர்க்கையாகவும் அருள்பாலிக்கிறார்.
காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும், திருஞான சம்பந்தருக்கு முத்து பந்தல் அமைத்து அதன் கீழ் நடந்து வரும் அழகைக் காண ஈசன் நந்தியை விலகக் கட்டளையிட்ட தலமும் ஆகும்.
Advertisement
Advertisement
இத்தகைய சிறப்புப்பெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோற்சவம் விழா 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டுக்கான விழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான 9 ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர்.