காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம்!
காமாட்சி அம்மனுக்குக் காஞ்சி சங்கராச்சாரியார்கள் புஷ்பாஞ்சலி செய்தது பற்றி..
வண்ண வண்ண மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மனுக்குக் காஞ்சி சங்கராச்சாரியார்கள் புஷ்பாஞ்சலி செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
சக்தி பீட தலங்களில் முதன்மையானதாக விளங்கும் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் கோடைக்காலம் நிறைவடைந்து வசந்த காலம் துவங்குவதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் நடைபெறும். அந்த வகையில் கோடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து பராபவ ஆண்டுக்கான வசந்த உற்சவம் நடைபெற்றது.
வசந்த உற்சவத்தை முன்னிட்டு காமாட்சி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பச்சைக் கரை சிகப்பு நிற பட்டு உடுத்தி, வைர வைடூரிய திருவாபரணங்கள் செண்பகப் பூ, மல்லிகைப் பூ, பன்னீர் பூ, மலர் மாலைகள் அணிவித்து, லட்சுமி சரஸ்வதி தேவியுடன், மேளதாளம் முழங்க ஊர்வலமாகக் கொண்டு வந்து, வண்ண வண்ண மலர்களாலும் காய்கறி பழங்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ண வண்ண மின் விளக்குகள் ஒளிரச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்தனர்.
Advertisement
Advertisement
வசந்த உற்சவத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும் கலந்துகொண்டு காமாட்சி அம்மனுக்கு மேளதாள, நாதஸ்வர வாத்தியங்கள் ஒலிக்க நான்கு விதமான வேதங்களை வேதபாராயண கோஷ்டியினர் பாட, காமாட்சி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து, தாமரை பூ, ரோஜாப்பூ செண்பகப் பூ, உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களால் மந்திர புஷ்பாஞ்சலி செய்து சிறப்புத் தீபாராதனைகளும் செய்து வழிபாடு செய்தனர்.
வெகு விமர்சையாக நடைபெற்ற வசந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காஞ்சி காமாட்சி அம்மனை மனம் குளிர தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.