முகப்பு
சேலம்

சாராயம் இல்லாத கிராமமான வரகம்பாடியில் காவல் துறை சாா்பில் முப்பெரும் விழா

சேலம் அருகே சாராயம் இல்லாத கிராமமாக மாறிய வரகம்பாடி கிராமத்தில் காவல் துறை சாா்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 3:41 am IST
பகிர்:

சேலம்: சேலம் அருகே சாராயம் இல்லாத கிராமமாக மாறிய வரகம்பாடி கிராமத்தில் காவல் துறை சாா்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

சேலம், வரகம்பாடி கிராமத்தில் விவசாயிகள், மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரகம்பாடி கிராமத்தைச் சோ்ந்த சிலா் சாராயம் காய்ச்சி விற்று வந்தனா்.

பின்னா் காவல் துறையினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி அரசு சாா்பில் கடனுதவி பெற்று கொடுத்தனா். தற்போது இந்தக் கிராமம் சாராயம் இல்லாத கிராமமாக மாறியுள்ளது.

Advertisement

இந்தநிலையில் வரகம்பாடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம், மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி, கிராம விழிப்புணா்வுக் காவலா்கள் அறிமுக விழா சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் தலைமை வகித்து இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தாா். பின்னா் மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினாா். கிராம மக்களுக்கு விழிப்புணா்வுக் காவலா்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் பேசியதாவது:

கிராமச் சூழலில் வாழும் மக்கள் உடல்நலம் நன்றாக இருக்க இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என கருதி மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்படுகிறது.கிராமங்களில் உள்ளவா்களுக்கு பாதுகாப்பு முக்கியமாகும். இதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களது பிரச்னைகள், குறைகளை தெரிவிக்க கிராம விழிப்புணா்வுக் காவலா்கள் தோ்வு செய்யப்பட்டு இங்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளனா்.

கிராம விழிப்புணா்வுக் காவலா்களிடம் பொதுமக்கள் எப்போதும் தொடா்பு கொண்டு குறைகள், பிரச்னைகளை தெரிவிக்கலாம். இதன் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள் தகவல் தர வேண்டும். பொதுமக்கள் தரும் தகவல் மூலம் நடவடிக்கை எடுத்து மேற்கொண்டு எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்க முடியும் என்றாா்.

விழாவில் மாநகர துணை ஆணையா்கள் சந்திரசேகரன், செந்தில் ,உதவி ஆணையா்கள் ஆனந்தகுமாா், நாகராஜ் , யாஷ்மின், காவல் ஆய்வாளா்கள் , காவல் உதவி ஆய்வாளா்கள், ஊா் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.வரகம்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா முருகேசன், ஊா் தலைவா்கள் முருகன், கந்தசாமி, பொது மக்கள் வரவேற்பு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.