நம்மைச் சுற்றி நடப்பது என்ன?: மாநகரம்!
பல இனம் சார்ந்த மக்கள், பல மொழிகள் பேசும் மக்கள், பல பண்பாடுகளைக் கொண்ட மக்கள் எனப் பல விதமான மக்கள் சேர்ந்து வாழும் விரிந்த நகரம் "மாநகரம்' எனப்படுகிறது. இங்கு மிகப் பெரிய அளவில் தொழில் வாய்ப்புகள் இ
பல இனம் சார்ந்த மக்கள், பல மொழிகள் பேசும் மக்கள், பல பண்பாடுகளைக் கொண்ட மக்கள் எனப் பல விதமான மக்கள் சேர்ந்து வாழும் விரிந்த நகரம் "மாநகரம்' எனப்படுகிறது. இங்கு மிகப் பெரிய அளவில் தொழில் வாய்ப்புகள் இருப்பதால், இத்தகைய மாநகரங்களை நோக்கி மக்கள் தொடர்ந்து வந்து குடியேறுகின்றனர். இதனால் மாநகரங்கள் தங்களின் எல்லைகளை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் நிலவும் சாதிப் பாகுபாடுகளை மறந்து இம் மாநகரங்களில் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் நேசத்துடன் பழகுகின்றனர். ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதே மாநகரத்தின் அழகு. ஒரு பெரு நகரம் பதினைந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருந்தால் அது மாநகரம் எனப்படுகிறது. மாநகர நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்தும் உள்ளாட்சி அமைப்பு "மாநகராட்சி' என அழைக்கப்படுகிறது.
மாநகராட்சி அமைப்பை நடத்திச் செல்பவர்கள் யார் தெரியுமா?
Advertisement
Advertisement
மாநகராட்சி மக்களின் தலைவர் மேயர் என்று அழைக்கப்படுகிறார். இதன் அரசுத்துறை தலைவர் ஆணையர். மேலும் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களும், மாநகராட்சியின் ஜனநாயக அமைப்பில் இடம் பெற்றிருப்பார்கள்.
தமிழ்நாட்டில் தற்பொழுது சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய எட்டு மாநகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
மாநகராட்சி அமைப்பிற்கான தேர்தல் நடக்கும் விதம் பற்றி இப்பொழுது காண்போம்.
மாநகராட்சித் தேர்தலிலும் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான ஒதுக்கீடுகள் நடைபெறுகின்றன. மொத்த வார்டுகளில் 33 விழுக்காடு பெண்களுக்காக ஒதுக்கப்படுகிறது. 18 விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடுகள் பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை சுழற்சி முறையில் வெவ்வேறு வார்டுகளுக்கு மாற்றி அமைக்கப்படும். புரிந்துகொண்டீர்கள் தானே!
இந்த சுழற்சி முறை வார்டு உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, மேயரை தேர்ந்தெடுப்பதிலும் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதனால் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என அனைவருக்கும் மேயர் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 74}வது திருத்தம் இத்தகைய சுழற்சி முறை தேர்தல் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறது.
மாநகராட்சித் தேர்தலில் கட்சி அடிப்படையில் போட்டியிடுகிறார்கள். அதிக வார்டுகளில் வெற்றி பெற்ற கட்சி அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அல்லவா? இப்படி அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி மாநகர நிர்வாகத்தை ஏற்று நடத்தும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பிரதிநிதிகளுக்கு நிர்வாகத்தில் உதவி புரிய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இருப்பார்கள்.
மாநகராட்சி ஆணையர், தலைமைப் பொறியாளர், துணைப் பொறியாளர்கள், சுகாதார அதிகாரி, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கல்வி அதிகாரி இவர்களுடன் மேலும் பல அரசு அலுவலர்கள் மாநகராட்சி அமைப்பில் பணிபுரிந்து மக்கள் சேவை ஆற்றுவார்கள்.