திரை மாறிய சுமலதா!
என்னை ஆந்திராவில் சிறந்த அழகியாகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அந்தச் செய்தி தெலுங்கு பத்திரிகையில் வெளிவந்தது. அதைப் பார்த்துத்தான் என்னை தெலுங்குப் படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்கள்.
நடிகர் சரத்பாபு வீட்டுக்கு தயாரிப்பாளர் பி.எஸ். வீரப்பா போகாமல் இருந்திருந்தால்… ‘திசை மாறிய பறவைகள்’ படத்தின் மூலம் சுமலதா நடிகையாக வந்திருக்க முடியாது!
திசை மாறிய பறவைகள் படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக சரத்பாபு வீட்டுக்கு பி.எஸ். வீரப்பா சென்றிருந்தார். சரத்பாபு உள்ளே இருந்து வர சற்று தாமதமாகவே, வரவேற்பு அறையில் இருந்த சில புத்தகங்களை வீரப்பா புரட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு தெலுங்குப் பத்திரிகை அவர் கண்ணில் பட, அதை எடுத்துப் பார்த்திருக்கிறார். அதில், ‘சமாஜானிக்கு சவால்’ என்ற தெலுங்குப் படத்தின் ஆரம்ப விழா படம் பிரசுரமாகியிருந்தது. அதில் கலந்துகொண்ட சுமலதாவின் படத்தை வீரப்பா பார்க்கவே, தனது படத்துக்குப் புதிய கதாநாயகி ஒருவரைத் தேடிக்கொண்டிருந்த அவர் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. உடனே தன் படத்துக்கு அந்தப் புதுமுகத்தை ஒப்பந்தம் செய்துவிட்டார்.
தமிழ்ப் படத்துக்குப் பத்திரிகை மூலமாக வந்த நீங்கள் தெலுங்குப் படமான சமாஜானிக்கு சவால் படத்துக்கு எப்படி ஒப்பந்தம் ஆனீர்கள்? என்று கேட்டதற்கு –
என்னை ஆந்திராவில் சிறந்த அழகியாகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அந்தச் செய்தி தெலுங்கு பத்திரிகையில் வெளிவந்தது. அதைப் பார்த்துத்தான் என்னை தெலுங்குப் படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்கள். ஆக, நான் தெலுங்கு – தமிழ் இரண்டு மொழிப் படங்களுக்கும் பத்திரிகை மூலமாகவே அறிமுகம் ஆனேன் என்று சிரித்துக்கொண்டே கூறினார் சுமலதா.
ஆந்திராவில் அழகியாக உங்களைத் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்?
அவர் அளித்த பதில் –
எனக்குப் படிப்பில் ஆர்வம் அதிகம். எம்.பி.எம்.க்குப் படித்துப் போலீஸ் அதிகாரியாக வந்திருப்பேன்.