கு.அழகிரிசாமி - வெளி ரங்கராஜன்; பக்.128; ரூ.50; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
மறைந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் பன்முகத்தன்மைகளை விரிவாக அறிமுகப்படுத்தும் நூல்.
கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்த கு.அழகிரிசாமி சிறுவயதிலேயே படிப்பு, ஓவியம், இசை ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் இளமைக்கால நண்பர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர், சார் பதிவு அலுவலகத்தில் எழுத்தர் போன்ற பணிகளை எழுத்தின் மீது உள்ள ஆர்வத்தால் உதறிவிட்டு, "உதவி ஆசிரியராகவும், பெயர் போடாத ஆசிரியராகவும்' பல பத்திரிகைகளில் வேலை செய்தவர். 1952 இல் "தமிழ்நேசன்' பத்திரிகையின் பொறுப்பை ஏற்க மலேசியா சென்று 5 ஆண்டுகாலம் பணி செய்தவர். தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி தலையங்கங்களை எழுதியதால், மலேசிய அரசியல்வாதிகளின் தலையீட்டின் காரணமாக, அந்த வேலையையும் இழந்தவர். அதன் பின் நாடு திரும்பி வந்து, பல இலக்கிய இதழ்களில் பல படைப்புகளை வழங்கியவர்.
இந்நூலில் அழகிரிசாமியின் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், கடிதங்கள் பற்றிய அறிமுகமும், விமர்சனங்களும் தனித்தனிக் கட்டுரைகளாக இடம் பெற்றிருக்கின்றன. ஆண் - பெண் உறவு பற்றி அறுபது ஆண்டுகளுக்கு முன்பே அழகிரிசாமி எழுதிய உளவியல் சார்ந்த சிறுகதைகள் வியக்க வைக்கின்றன. பணம் சம்பாதிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தனக்கு விருப்பமான வாழ்க்கையை, அதில் எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும், பிடிவாதமாக வாழ்ந்த மறைந்த ஓர் எழுத்தாளரைப் பற்றிய, மனிதரைப் பற்றிய நல்ல அறிமுகம் இந்நூல்.