ஆசிய தடகள சங்கத் தலைவர் தேர்தலில் கல்மாடி தோல்வி
ஆசிய தடகள சங்கத்தின் (ஏஏஏ) தலைவர் தேர்தலில் சுரேஷ் கல்மாடி தோல்வியடைந்தார்.
ஆசிய தடகள சங்கத்தின் (ஏஏஏ) தலைவர் தேர்தலில் சுரேஷ் கல்மாடி தோல்வியடைந்தார்.
கடந்த 13 ஆண்டுகளாக ஆசிய தடகள சங்கத்தின் தலைவராக சுரேஷ் கல்மாடி இருந்து வந்தார். இப்பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் 3-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், ஆசிய தடகள சங்கத்தின் கூட்டம் கடந்த இரு நாள்களாக புணேவில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை சங்கத் தேர்தல் நடைபெற்றது. சர்வதேச தடகள சம்மேளனத் தலைவர் லேமைன் டியக் மேற்பார்வையில் இத்தேர்தல் நடைபெற்றது.
இத் தேர்தலில் சுரேஷ் கல்மாடியும், கத்தார் தடகள சம்மேளனத்தின் தலைவர் ஜூமான் அல்-ஹமீதும் போட்டியிட்டனர். ஆசிய தடகள சங்கத்தில் 45 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நாடுகளின் பிரதிநிதிகள் ரகசிய முறையில் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். இதில் கல்மாடி 18-20 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் அல்-ஹமீதிடம் தோல்வியடைந்தார். 7 செல்லாத வாக்குகள் பதிவாகின.
Advertisement
செல்லாத வாக்குகள் கல்மாடிக்கு எதிராக அமைந்ததாக இந்திய தடகள சம்மேளன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கல்மாடியின் தோல்வி குறித்து அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் தெரிவித்தனர்.
"ஆசிய தடகள சங்கத் தலைவராக கல்மாடி பதவி வகிக்கும் முன், ஆசிய ஜூனியர் மற்றும் சீனியர் சாம்பியன்ஷிப் என இரு போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டன. அவர் பதவியேற்ற பின்தான் ஆசியன் கிராண்ட்ப்ரீ, ஆசியன் ஆல்-ஸ்டார், ஆசியன் மாரத்தான், ஆசியன் நடை போட்டி சாம்பியன்ஷிப் உள்ளிட்டவை நடத்தப்பட்டன' என்று அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அல்-ஹமீது, 2 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார். 2015-ம் ஆண்டு மீண்டும் ஆசிய தடகள சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.
முன்னதாக, 2000-ம் ஆண்டில் ஆசிய தடகள சங்கத் தலைவராக கல்மாடி தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு, அந்த அமைப்பின் தலைவராக தொடர்ந்து இருமுறை போட்டியின்றி அவரே தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் எம்.பி.யான கல்மாடியின் 13 ஆண்டு கால பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வந்தது. மேலும், இத்தோல்வியின் மூலம் சர்வதேச தடகள சம்மேளனத்தின் உறுப்பினர் பதவியையும் கல்மாடி இழப்பார்.
ஆசிய தடகள சம்மேனளத்தின் தலைவராகப் பதவி வகித்தவர்கள், அப்பதவியிலிருந்து விலகினாலும், அதன் வாழ்நாள் தலைவர் எனும் கெüரவ பதவியைப் பெறுவர். எனவே, கல்மாடி தற்போது அந்த அமைப்பின் வாழ்நாள் தலைவர் எனும் அந்தஸ்தைப் பெறுவார்.
முன்னதாக, காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கல்மாடி, 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆசிய தடகள சங்கத்தின் மூத்த துணைத் தலைவர், 5 துணைத் தலைவர்கள், 8 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.