ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 44 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில் நேற்று (டிசம்பர் 4) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 138 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ஸாக் கிராலி 76 ரன்களும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 38 ரன்களும் எடுத்தனர். ஹாரி ப்ரூக் 31 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஸ்காட் போலாண்ட், மைக்கேல் நெசர் மற்றும் பிரண்டன் டாக்கெட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
மூவர் அரைசதம்; 44 ரன்கள் முன்னிலை
இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் ஜேக் வெதர்லேண்ட், மார்னஸ் லபுஷேன் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மூவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஜேக் வெதர்லேண்ட் 72 ரன்களும், மார்னஸ் லபுஷேன் 65 ரன்களும் எடுத்தனர். ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்கள் எடுத்தார். அவர்களைத் தொடர்ந்து, கேமரூன் கிரீன் 45 ரன்கள், டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் பிரைடான் கார்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அலெக்ஸ் கேரி 46 ரன்களுடனும், மைக்கேல் நெசர் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தைக் காட்டிலும் 44 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.