ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜூன் 6) நியூ சண்டீகரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அறிமுக வீரர் மானவ் சுதரின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 60 ரன்கள் எடுத்தார். அறிமுக வீரரான மானவ் சுதர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Advertisement
Advertisement
இதனையடுத்து, ஃபாலோ ஆன் ஆன ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணியில் செதிக்குல்லா அடல் 42 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 24 ரன்களும் எடுத்தனர். ரஹ்மத் ஷா 13 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் மானவ் சுதர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அறிமுகப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மானவ் சுதருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.