ஆர்சிபி சூப்பர் தொடக்கம்... மும்பைக்கு 241 ரன்கள் இலக்கு!
பெங்களூரு அணியில் மூவர் அரைசதம்...
மும்பை : மும்பை வான்கடே விளையட்டுத் திடலில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த ஊரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன் டாஸ் சுண்டப்பட்டதில் நாணயத்தின் முகம் மும்பை அணிக்குச் சாதகமாக விழ, அதையடுத்து பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார் மும்பை அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா.
களத்தில் புகுந்த ஆர்சிபி அணி தொடக்க வீரர்களான பிலிப் சால்ட் - விராட் கோலி இணை, மும்பை அணி பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு ரன்களை வாரிக் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 120 ரன்கள் குவித்தது.
Advertisement
6 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 36 பந்துகளில் 78 ரன்கள் குவித்த பிலிப் சால்ட் 11-ஆவது ஓவரில் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். இதனால் நீல வண்ணமயமாகக் காட்சியளித்த வான்கடேவில் பார்வையாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
அடுத்து களமிறங்கிய ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் வந்த வேகத்தில் மட்டையைச் சுழற்றி அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். அவர் 20 பந்துகளில் 53 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
அவருக்கு முன்னதாகவே, விராட் கோலி 38 பந்துகளில் அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். இறுதி தருணம் வரை அதிரடி பாணியிலான ஆட்டத்திறனையே ஆர்சிபி வீரர்கள் வெளிப்படுத்தியதால் ஸ்கோர் போர்டில் ரன் மளமளவென எகிறியது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 240 ரன்கள் குவித்தது.