சிஎஸ்கேவின் வரலாற்று வெற்றியை முகேஷ் சௌதரிக்குச் சமர்ப்பித்த கேப்டன் ருதுராஜ்!
சிஎஸ்கேவின் வரலாற்று வெற்றி குறித்து கேப்டன் ருதுராஜ் கூறியிருப்பதாவது...
சிஎஸ்கே தனது வரலாற்று வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்றிரவு பெற்றது. இந்த வெற்றியை சிஎஸ்கேவின் வீரர் முகேஷ் சௌதரிக்கு சமர்ப்பிப்பதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
நேற்றிரவு வான்கடேவில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 207/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முகேஷ் சௌதரி பவர்பிளேவில் டி காக் விக்கெட்டை எடுத்து அசத்தினார். கடந்த செவ்வாய்க்கிழமை இவரது தாயார் உடல்நலக் குறைவினால் காலமானார். இருப்பினும் சிஎஸ்கே அணிக்கு முக்கியமான போட்டி என்பதால் வந்து விளையாடினார்.
Advertisement
அகீல் ஹைசைன் அட்டகாசமாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்தப் போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது வென்றார். போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசியிருப்பதாவது:
முகேஷ் சௌதரிக்கு கடினமான நாள்கள். இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். அந்த மாதிரி கடினமான சூழ்நிலையில் இருந்து வந்து விளையாடியதுக்கு தலைவணங்குகிறேன். அவர் வந்து விளையாடியதற்கு அதற்கு மன வலிமை தேவை.
முகேஷ் சிஎஸ்கே அணிக்காக வந்தார். அணிக்கு அவர் முக்கியம் என்பது அவருக்குத் தெரியும்; அதனால்தான் அவருக்குத்தான் எல்லா புகழும் சேரும். பந்துவீசுவதற்கு முன்பாக இந்தப் போட்டியில் முகேஷ் சௌதரிக்காக வெல்ல வேண்டுமென வீரர்களிடம் கூறினேன். அதேபோல் அனைவரும் பங்காற்றினார்கள். அவருக்காக நாங்கள் எப்போதும் இருப்போம் என்றார்.
இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸை சேப்பாக்கம் திடலில் சந்திக்கவிருக்கிறது.