ஆடுகளத்தின் மீது குறை சொல்லும் நபரல்ல நான்... தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா!
மிகப்பெரிய தோல்விக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் பேட்டி...
சிஎஸ்கேவுக்கு எதிராக தனது மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா, “ஆடுகளத்தைக் (பிட்ச்) குறை சொல்லும் நபரல்ல நான்” எனக் கூறியுள்ளார்.
நேற்றிரவு (ஏப்.23) வான்கடேவில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 207/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
முதல்முறையாக வான்கடேவில் மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. அதிலும் தனது மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. இது குறித்து அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியிருப்பதாவது:
Advertisement
பவர்பிளேவில் விக்கெட்டுகளை இழப்பது எப்போதுமே சிக்கலானது. சேஸிங்கின்போது இப்படியான இழப்புக்குப் பிறகு எங்களால் மீண்டெழ முடியாமல் போய்விட்டது.
ஆடுகளத்தில் (பிட்ச்) மாற்றம் நடந்தது எனக் கூறமாட்டேன். ஆடுகளத்தின் மீது குறை சொல்லும் நபரும் அல்ல நான். சிஎஸ்கே நன்றாக விளையாடி, 207 ரன்கள் குவித்தார்கள். அதே மண்ணில்தான் நாங்களும் விளையாடினோம். நாங்கள் சரியாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்.
எங்களது சுழல் பந்துவீச்சாளர்களும் நன்றாகவே பந்துவீசினார்கள். சஞ்சு சாம்சன் தலைசிறந்த ஓர் ஆட்டத்தை ஆடினார். அதேசமயம் அவரைத் தவிர்த்து வந்த மற்ற பேட்டர்களும் விக்கெட் இழந்தாலும் அதிரடியாக விளையாடினார்கள். அதனால்தான் அவர்களுக்கு நல்ல இலக்கு கிடைத்தது.
இதைச் சேஸிங் செய்ய எங்களுக்கு நல்ல பவர்பிளே கிடைத்து, தருணங்களும் எங்களுக்கு சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. அடுத்த போட்டிகளில் மாற்றம் நடக்குமா என்பது குறித்து நாங்கள் பேசுவோம்.
அடுத்த போட்டிக்கும் இன்னும் சில நாள்கள் இருப்பதால், எங்களால் என்ன சிறப்பாக செய்யமுடியும் என்பதைப் பார்க்க வேண்டும் என்றார்.