நடப்பு ஐபிஎல் சீசன் பாதியிலேயே மும்பை அணியிலிருந்து விலக முடிவெடுத்த ஹார்திக் பாண்டியா?
நடப்பு ஐபிஎல் சீசன் பாதியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலக ஹார்திக் பாண்டியா முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசன் பாதியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலக ஹார்திக் பாண்டியா முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அந்த சீசனிலேயே ஹார்திக் பாண்டியா, ரசிகர்களின் கிண்டல் கேலிகளுக்கு ஆளானார்.
கேப்டனாக பொறுப்பேற்றது முதல் அவர் தொடர்ந்து கடந்த இரண்டு சீசன்களாக பல்வேறு விதமான கிண்டல், கேலிகளுக்கும் விமர்சனத்துக்கும் ஆளானார். நடப்பு ஐபிஎல் தொடரிலும் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்படத் தவறியது. நடப்பு சீசனின் பிற்பகுதியில் சில போட்டிகளில் ஹார்திக் பாண்டியா விளையாடவில்லை. இதனால், மும்பை அணி நிர்வாகத்துக்கும் ஹார்திக் பாண்டியாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. மும்பை அணியிலிருந்து விலகி ஹார்திக் பாண்டியா வேறு அணிக்கு செல்லவிருப்பதாகவும் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகவுள்ளதாக நடப்பு ஐபிஎல் தொடரின் பாதியிலேயே ஹார்திக் பாண்டியா அணி நிர்வாகத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹார்திக் பாண்டியா மனதளவில் மிகுந்த அழுத்தத்தில் இருந்தார். அவர் முற்றிலுமாக தன்னுடைய ஆற்றலை இழந்துவிட்டார். மேலும், அவருக்கு முதுகுப் பகுதியில் காயமும் ஏற்பட்டது. மும்பை அணி பிளே ஆஃப் செல்ல வாய்ப்பில்லை என்ற சூழல் உருவானபோதே ஹார்திக் பாண்டியா மும்பை அணியிலிருந்து விலக உள்ளதாக தனது முடிவை அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
ஹார்திக் பாண்டியாவுக்கு 32 வயதுதான் ஆகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் மீண்டும் மும்பை அணியில் இணைந்தபோது, அவருக்கு 30 வயதுதான். மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசன் அவர் பல கிண்டல்களுக்கு ஆளானார். இந்த சீசனும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியாக செல்லவில்லை. கடந்த மூன்று ஆண்டுகள் ஹார்திக் பாண்டியாவுக்கு எளிதாக இருக்கவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸிலிருந்து குஜராத் டைட்டன்ஸில் ஹார்திக் பாண்டியா இணைந்தபோது, இருந்த சூழல் அவர் மீண்டும் 2024 ஆம் ஆண்டு மும்பை அணிக்குத் திரும்பியபோது இல்லை.
அணியில் உள்ள மூத்த வீரர்கள் ஒருமித்த கருத்தில் இல்லை. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் வெவ்வேறு திசையில் பயணிக்கிறார்கள். அதனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு ஹார்திக் பாண்டியாவால் அனைவரையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்க முடியவில்லை. அதனால், நடப்பு ஐபிஎல் தொடரின் பாதியிலேயே மும்பை அணியிலிருந்து விலகவுள்ள முடிவை அணி நிர்வாகத்திடம் ஹார்திக் பாண்டியா கூறிவிட்டார். மும்பை அணியுடனான ஹார்திக் பாண்டியாவின் பயணம் முடிவுக்கு வருவது என்பது உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் சென்னை சூப்பர் கிங்ஸில் டிரேடிங் மூலம் இணைய நிறைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.