தன்னம்பிக்கை உயர காரணம் தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல் அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் குறித்து பேசியிருப்பதாவது...
ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல் அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் குறித்து மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார். தனது தன்னம்பிக்கை வளர தினேஷ் கார்த்திக்தான் காரணம் எனக் கூறியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 205/3 ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 18.5 ஓவர்களில் 206/5 ரன்கள் எடுத்து வென்றது. இந்த வெற்றியுடன் ஆர்சிபி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் தேவ்தத் படிக்கல் 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 2 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.
Advertisement
இந்தப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தேவ்தத் படிக்கல் முதலிடம் பிடித்து அசத்தினார். அதனால் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. இது குறித்து தினேஷ் கார்த்திக் உடனான உரையாடலில் படிக்கல் பேசியிருப்பதாவது:
பந்தைப் பார்த்து அதற்கேற்ப விளையாட வேண்டும் என வந்தேன். குஜராத் அணியினர் வேகமாக வீசினார்கள். அதிகமாக சிந்திக்கவில்லை; எளிமையான திட்டங்களுடன் வந்திருந்தேன்.
உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடியதால் சிறிது தன்னம்பிக்கை இருந்தது. இருப்பினும் கடந்த சில போட்டிகள் சரியாக விளையாடவில்லை. நான் என்னுடைய நலனைப் பார்க்காமல் அந்தச் சூழலில் அணிக்கு என்ன தேவையோ அதைப் பார்த்து விளையாட முடிவெடுத்தேன்.
நான் தற்போது உங்களைப் (தினேஷ் கார்த்திக்) புகழப் போகிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்றியதில் இருந்து என்னுடைய தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது. நான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவை அளித்துள்ளீர்கள். இதற்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார்.