என்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் இவர்தான்; மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் யார் என்பது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் தேவ்தத் படிக்கல் மனம் திறந்துள்ளார்.
தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் யார் என்பது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் தேவ்தத் படிக்கல் மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2020 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக முதன் முதலாக அறிமுகமான தேவ்தத் படிக்கல், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் படிக்கல் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அறிமுகமானபோது விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்தது எப்படி ஒரு இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள மிகவும் உதவியதாக தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக ஜியோஸ்டாரில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் பேசியதாவது: கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அறிமுகமானபோது, நான் என்னுடைய கிரிக்கெட் பயணத்துக்கு தயாராக இருந்ததாக உணர்ந்தேன். உள்ளூர் கிரிக்கெட்டில் நன்றாக ரன்கள் குவித்திருந்தது எனக்கு பக்கபலமாக இருந்தது.
விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வயதில் விராட் கோலி விளையாடியதைப் பார்த்து ஒரு இன்னிங்ஸை இப்படித்தான் கட்டமைக்க வேண்டும் என்ற தெளிவு எனக்கு கிடைத்தது. என்னுடைய வளர்ச்சியில் அந்தப் புரிதல் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மாறி இளம் வயதில் வெவ்வேறு இடங்களில் பேட்டிங் செய்ய வேண்டியது மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்காக நான் விளையாடியது நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. என்னை சிறந்த வீரராக உருவாக்கியதில் இந்த இரண்டு அணிகளுக்கும் மிகப் பெரிய பங்களிப்பு இருக்கிறது.
வெவ்வேறு இடங்களில் களமிறங்கிய விளையாடியது, ஆட்டம் குறித்த புரிதலையும், அழுத்தமான சூழலில் எப்படி இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தது. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. அந்த கடினமான சீசனிலிருந்து மீண்டு வருவது ஒருபோதும் எளிதாக இருக்கவில்லை. அந்த சீசனின்போது, என்னுடைய மனதில் நிறைய விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த சீசன் முடிந்ததும் நான் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. என்னுடைய ஆட்டத்தில் பல மாற்றங்களை கொண்டுவர கடுமையாக உழைத்தேன் என்றார்.