264 ரன்களை சேஸ் செய்தது எப்படி? பஞ்சாப் கேப்டனின் பேட்டி!
சாதனை வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பேசியிருப்பதாவது...
தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 265 ரன்களை சேஸ் செய்த பிறகு பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், “அவர்களால் முடியுமென்றால் நம்மாலும் முடியும் என்பதுதான் எனது நம்பிக்கையாக இருந்தது” என்றார்.
நேற்று தில்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தில்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 264 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த அணியாக வரலாறு படைத்துள்ளது. இதுவரை, 11 முறை 200க்கும் மேற்பட்ட இலக்கை சேஸ் செய்த ஒரே அணியாக பஞ்சாப் கிங்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
இந்த சாதனை வெற்றி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியிருப்பதாவது:
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்கு பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. ஏனெனில், முதலில் இந்தக் கொளுத்தும் வெய்யிலில் பந்துவீச்சாளர்கள் வீசுவதெல்லாம் பவுண்டரிகள், சிக்ஸர்களுமாக செல்கையில் நமக்கு சிந்திக்க மறந்துவிடும். என்ன செய்வதென தெரியாது. ஆனாலும் ஆடுகளம் எப்படி செயல்படுகிறதென எனக்குத் தெரியும்.
ஆடுகளத்தில் பந்து திரும்புமென நினைத்தோம். ஆனால், நடக்கவில்லை. சஹால் வரும்போது எந்தப் பாதிப்பும் நடக்கவில்லை. ராகுல் சிறப்பாக விளையாடினார். அதைப் பார்க்க கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
ராகுல் பெரிதாக இழுத்து அடிக்கவில்லை. வெறுமனே பந்தைப் பார்த்து விளையாடினார். 220-225 ரன்களை 2 ஓவர்கள் மீதமிருக்க சேஸ் செய்திருக்கிறோம். அதனால், மனநிலை ஒன்றுதான். முடிந்த அளவுக்கு பவர்பிளேவில் ரன்களைக் குவிக்க வேண்டும்.
ஓய்வறையில் நான் வீரர்களிடம் சொன்னது - அவர்களால் முடியுமென்றால் நம்மாலும் முடியும் என்பதுதான். அதுதான் எனது நம்பிக்கையாகவும் இருந்தது என்றார்.